ஞாயிறு, 16 அக்டோபர், 2011

மூலம் மற்றும் பூராடம் நட்சதிரதிர்க்கான விருட்சங்கள்

தனித்துவ குணம், இறை பக்தி, எடுத்த வேலையை முடிக்கும் உறுதி, எதிராளிகளை அன்பால் வெல்லும் சாதுர்யம், முன்கோபம் ஆகியவை 'மூலம்’ நட்சத்திரக்காரர்களின் இயல்புகள். தனுசு ராசி மற்றும் வியாழக் கிரகத்துடன் தொடர்பு கொண்டது, இந்த நட்சத்திரம். வியாழக்கிழமை மற்றும் நவம்பர் 21-ஆம் தேதி முதல் டிசம்பர் 20-ஆம் தேதி வரை பிறந்தவர்கள், மூலம் நட்சத்திரத்தின் ஆளுகைக்கு உட்பட்டவர்கள். இதன் கெட்ட கதிர் வீச்சுக்கள் நோய்களையும், நல்ல கதிர் வீச்சுக்கள் நன்மைகளையும் தருகின்றன. மூல நட்சத்திர தோஷம் உள்ளவர்கள், கோங்கிலம் (இலவம்) மரத்தின் நிழலில் தினமும் அரை மணி நேரம் செலவழிப்பதால், நல்ல பலன் உண்டு என்கிறது வானவியல் மூலிகை சாஸ்திரம். தஞ்சாவூர் மாவட்டம், ஆடுதுறைக்கு சுமார் 3 கி.மீ. தொலைவிலும், திருவிடைமருதூருக்கு சுமார் 6 கி.மீ. தொலைவிலும் உள்ளது திருமங் கலக்குடி. இங்குள்ள ஸ்ரீமங்களநாயகி சமேத ஸ்ரீபிராணநாதேஸ்வரர் கோயிலின் ஸ்தல விருட்சம்- இலவம். இந்தக் கோயில், திருவாவடு துறை ஆதீன நிர்வாகத்தின் கீழ் உள்ளது. அம்பாளின் திருநாமம் ஸ்ரீமங்களாம்பிகை. அத்துடன் ஸ்ரீமங்கல விநாயகர், மங்கல தீர்த்தம், மங்கல விமானம், தலம்- மங்கலக்குடி என உள்ளதால், இதனைப் பஞ்ச மங்கல க்ஷேத்திரம் என்பர். அப்பர், ஞானசம்பந்தர், ராமலிங்க அடிகளார் ஆகியோர் பாடிப்பரவிய தலமிது. தனக்கு வரவிருந்த தொழுநோய் பற்றி ஞான திருஷ்டியால் அறிந்த காலவமுனிவர், இமயமலையில் நவக்கிரகங்களை வேண்டி தவமிருந்தாராம். அவருக்கு காட்சி தந்த நவக் கிரகங்களோ, ''பூர்வஜென்ம வினையை தடுக்கும் அதிகாரம் எங்களுக்கு இல்லை'' என்றனராம். இதனால் கோபம் கொண்ட முனிவர், தனக்கு வரவிருக்கும் நோய் நவக்கிரகங்களையும் பீடிக்கக் கடவது என்று சபித்தார். அதன்படி நோயால் அவதிப்பட்ட நவக்கிரகங்கள், ஈசனைப் பிரார்த் தித்தனர். அப்போது, ''காவிரியின் வடகரையில், வெள்ளெருக்கு வனத்தில், ஸ்ரீபிராணநாத ஸ்வாமியை வணங்கி தவமிருங்கள். தொடர்ந்து 11 ஞாயிறுகளில் வெள்ளெருக்கு இலையில் தயிரன்னத்தை ஸ்வாமிக்குப் படைத்து, நீங்கள் சாப்பிட்டு வந்தால், விமோசனம் உண்டு!'' என்றொரு அசரீரி ஒலித்தது. அதன்படியே வழிபட்டு, சிவனருளால் நவக்கிரகங்கள் விமோசனம் அடைந்தனராம். முதலாம் குலோத்துங்கச் சோழனின் அமைச்சர் அலைவாணர் என்பவர், வரிப்பணத்தை செலவழித்து இங்கே சிவனாருக்கும் நவக்கிரகங் களுக்குமாக ஆலயம் எழுப்பினாராம். இதனால் கோபம் கொண்ட மன்னன், அமைச்சருக்கு மரண தண்டனை அளித்தான் அப்போது, ''நான் இறந்ததும் எனது உடலை திருமங்கலக்குடியில் புதையுங்கள்'' என்று வேண்டிக் கொண்டாராம் அமைச்சர். தண்டனை நிறைவேற்றப்பட்டதும், அவரது உடல் இந்தத் தலத்துக்குக் கொண்டு வரப்பட்டது. அவரின் மனைவி அம்பாள் சந்நிதியில் நின்று, 'உனக்குக் கோயில் கட்டிய என் கணவனைத் திருப்பிக்கொடு’ என அழுது மன்றாடினாள். அவளுக்கு மனமிரங்கி அமைச்சரை உயிர்ப்பித்தார் சிவனார். இதனால் அவருக்கு ஸ்ரீபிராணநாதேஸ்வரர் என்று பெயர்! அன்று முதல், தன்னை நாடி வரும் பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியம் தந்தருள்கிறாள், ஸ்ரீமங்களாம்பிகை. இங்கே, நவக்கிரக சந்நிதி இல்லை; சூரியனும் சந்திரனும் தனித்தனியே அருள்பாலிக்கின்றனர். ஸ்ரீசிவ துர்கை, ஸ்ரீவிஷ்ணு துர்கை இருவரையும் தரிசிக்கலாம். ஸ்தல விருட்சம்- இலவம்.இதன் இலையை அரைத்துப் பசும்பாலில் கலந்து சாப்பிட, சிறுநீர் எரிச்சல் நீங்கும்; இதன் பூவைத் தண்ணீரில் கலந்து சாப்பிட, மலச்சிக்கல் சீராகும். இலவத்தில் இருந்து கிடைக்கிற கோந்து, வெள்ளைப்படுதல் மற்றும் சீதபேதியைக் கட்டுப்படுத்த வல்லது. இலவம், இலவு என்றெல்லாம் குறிப்பிடப்படும் இந்த மரத்தின் செந்நிறப் பூக்கள் குறித்து, குறிஞ்சிப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. யானைகள் தங்களது தினவைப் போக்கிக்கொள்வதற்கு, முள் அமைந்த அடிமரத்தில் உராய்ந்து தேய்த்துக் கொள்கின்றன என்றும், அந்த மரம் பாலை நிலத்தில் வளரும் என்றும் இலக்கியங்கள் தெரிவிக்கின்றன. திருநன்னிலத்துப் பெருங்கோயில், திருக்கோடி, திருக்கைச்சினம் ஆகிய கோயில்களிலும் இலவ மரமே தலவிருட்சம். 'பூர்வ ஷென்ம தோஜம் விலகும்!’ '’ஸ்ரீபிராணநாதருக்கு, 11 ஞாயிற்றுக்கிழமைகள் எருக்கன் இலையில் தயிர் அன்னம் நைவேத்தியம் செய்து, சந்நிதிக்கு எதிரே சாப்பிட்டால், ரோகப் பிணிகள் யாவும் நீங்கும்; ஆயுள் கூடும். அதே நாளில் அர்ச்சித்து, தயிர்சாத நைவேத்தியத்தை அன்னதானம் செய்து பிரார்த்தித்தால், பூர்வஜென்ம தோஷங்கள், பித்ரு தோஷம், கிரக தோஷம் என சகல தோஷங்களும் விலகும்!'' என்கிறார் கோயில் அர்ச்சகர், சுவாமிநாத சிவம் குருக்கள். ''ஸ்ரீமங்களாம்பிகைக்கு வெள்ளிக்கிழமையன்று, அர்ச்சனை செய்து வேண்டினால், திருமணத் தடை மற்றும் தோஷங்கள் நீங்கும். திருமணமாகி, மாங்கல்ய தோஷம் உள்ளவர்கள், சந்நிதிக்கு வந்து, 'மறு மாங்கல்யதாரணம்’ செய்துகொண்டால், தீர்க்க சுமங்கலியாக வாழ்வார்கள்'' என்கிறார் சுவாமிநாத சிவம் குருக்கள். -------------------------------------------------------------------------------- தைரியம், நேர்மை, கண்ணியம், பயணத்தில் ஆர்வம், வாசனைப் பிரியர்கள், பெற்றோரிடம் பாசம் ஆகியவை பூராடம் நட்சத்திரத்துக்காரர்களின் குணங்கள். தனுசு ராசி மற்றும் வியாழன் கிரகத்துடன் தொடர்பு கொண்டது இந்த நட்சத்திரம். வியாழக்கிழமை மற்றும் நவம்பர் 21-ஆம் தேதி முதல், டிசம்பர் 20-ஆம் தேதி வரை பிறந்தவர்கள், பூராடம் நட்சத்திரத்தின் ஆளுகைக்கு உட்பட்டவர்கள். பூராட நட்சத்திரத்துக்கு உகந்தது, பவழ மல்லிகை மரம்; அதன் நல்ல கதிர்வீச்சுக்களை உள்வாங்கிக்கொள்ளும் தன்மை கொண்டது. பூராட தோஷம் உள்ளவர்கள், மல்லிகை மரத்தின் நிழலில் தினமும் அரைமணி நேரம் அமர்ந்திருந்தால், அதில் இருந்து தயாரிக்கப்படும் மருந்துகளை உட்கொண்டால், நற்பலன்கள் கிடைக்கும். நாகை மாவட்டம், சீர்காழி ஸ்ரீதிருநிலை நாயகி சமேத ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் கோயிலின் ஸ்தல விருட்சம், பவழ மல்லிகை. தருமை ஆதீன நிர்வாகத்தின் கீழ் உள்ள ஆலயம் இது. காளிங்கப் பாம்பு பூஜித்த தலம் ஆதலால், ஸ்ரீகாளிபுரம் எனப் பெயர் பெற்று, அதுவே பின்னாளில் சீகாழி, சீர்காழி என மருவியதாம். ஸ்ரீபிரம்மன் ஸ்தாபித்த சிவலிங்கம் என்பதால், ஸ்வாமிக்கு ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் என்று திருப்பெயர் அமைந்ததாம். நாற்புறமும் கோபுரங்களுடன் பிரமாண்ட மாகத் திகழ்கிறது ஆலயம் முதல் தளத்தில் ஸ்ரீபெரியநாயகி சமேத ஸ்ரீபெரியநாயகராக சிவனார் எழுந்தருளியுள்ள ஸ்ரீதோணியப்பரே இங்கே குரு மூர்த்தம். ஊழிக்காலத்தில், பிரணவத்தைத் தோணி யாகக் கொண்டு உலகை வலம் வரும்போது, பிரளயத்தில் அழியாத இந்தத் தலத்தை மூலாதார க்ஷேத்திரம் எனச் சொல்லி அருளி னாராம் சிவனார். இரண்டாவது தளத்தில், மலையுச்சியில் காட்சி தருகிறார் ஸ்ரீசட்டைநாதர். திருஞான சம்பந்தருக்கு அம்பிகை திருமுலைப்பால் தந்தருளிய அற்புதமான இந்தத் தலத்தின் விருட்சம், பவழ மல்லிகை மரம். பாரிஜாத மரம் என்றும் சொல்வார்கள். இதன் மூன்று இலைகளில் சிவா, விஷ்ணு, பிரம்மா ஆகிய மூவரும் அமர்ந்திருப்பதாக ஐதீகம். பாரிஜாதகா என்னும் இளவரசி ஒருத்தி, கதிரவன் மீது காதல் கொண்டாளாம். ஆனால், அவளை ஏற்கவில்லை கதிரவன். இதில் விரக்தியுற்றவள், தன்னைத்தானே எரித்துக்கொண்டு இறந்தாள். அந்தச் சாம்பலில் இருந்து உருவானதுதான் பவழ மல்லிச் செடி என்றொரு கதை உண்டு. பகலில் சூரியனுக்கு முன்னே உதிர்ந்து, இரவில் செழித்து மணக்கும் குணம் கொண்டது பவழ மல்லிகை. இங்கே ஒரு முக்கியமான விஷயம்... தரையில் விழுந்து கிடக்கும் பூக்களை நாம் பூஜைக்குப் பயன்படுத்த மாட்டோம். ஆனால், இதில் பவழ மல்லிகைக்கு மட்டும் விதிவிலக்கு உண்டு. பவழ மல்லிகையைக் கஷாயமாக்கி குடித்தால் நீரிழிவு நோய், சிறுநீரகப் பிரச்னைகள் விரைவில் குணமாகும். இதன் இலைச் சாறு, வயிற்றுக் கோளாறுக்கு வடிகாலாகும். பித்தக் காய்ச்சல், தொடை நரம்பு வலி ஆகியவற்றில் இருந்து நிவாரணம் கிடைக்கும். இதன் வேர், பல் ஈறில் உள்ள வலியை நீக்கவல்லது. இதன் தளிர் இலைகள், மூல நோயிலிருந்து நிவாரணம் தருகின்றன. பவழ மல்லிகைப் பூக்களோ இருமலை குணமாக்கப் பயன்படுத்தப்படுகின்றன. விதைகள் சொறி, சிரங்கு, நமைச்சலைக் குணமாக்குகின்றன. 'சேடல் செம்மல் சிறு செங்குரலி’ என்கிற குறிஞ்சிப் பாட்டில், 'சேடல்’ என்பது 'பவழக்கால் மல்லிகை’ என விளக்கவுரை தந்துள்ளார் நச்சினார்க்கினியர். திருத்துறைப்பூண்டியில் இருந்து சுமார் 15 கி.மீ. தூரத்தில் உள்ள திருக்களர் ஆலயத்திலும், கும்பகோணம்- திருநரையூர் சித்தீச்சரம் ஆலயத்திலும் பவழ மல்லிகையே, தல விருட்சம்! - விருட்சம் வளரும்... படங்கள்: கே.குணசீலன் 'ஞானம் கிடைக்கும் தலம்!’ ''இங்கேயுள்ள ஸ்ரீபிரம்மபுரீஸ்வரரை வணங்கிய பிறகே, தனது படைப்புத் தொழிலைத் துவக்கினார் பிரம்மா என்கிறது புராணம். இந்தத் தலத்து சிவ- பார்வதியை வணங்கினால் ஞானம் கிடைக்கும்; தோஷங்கள் நிவர்த்தியாகும்'' என்கிறார் ஆலய அர்ச்சகர் வெங்கட்ராம சிவாச்சார்யர். மேலும், ''பிரளயத்தில் உலகம் அழிந்த பிறகு, உலகை இங்கிருந்துதான் இறைவன் உருவாக்கினார். அதனால், இது சக்தி வாய்ந்த திருத்தலமாகப் போற்றப்படுகிறது'' என்கிறார் அவர்.

ஆரோக்கியம் அருளும் ஆலய விருட்சங்கள்!

தர்ம சிந்தை, பக்தி, சகல கலைகளையும் அறியும் ஆர்வம், அமைதி, பிறருக்கு மனதாலும் தீங்கு நினைக்காத இயல்பு ஆகியன உத்திராட நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணங்கள்! சனிக்கிழமை, டிசம்பர் 21-ம் தேதி முதல் ஜனவரி 19-ம் தேதி வரை பிறந்தவர்களுக்கு உரிய நட்சத்திரம், உத்திராடம். மேற்கண்ட காலங்களில், அதிக அளவில் வெளிப்படும் உத்திராடத்தின் கதிர் வீச்சுக்களை, வாகை மரம் தனக்குள் சேகரித்து வைத்துக் கொள்ளும். உத்திராட நட்சத்திரம், வாகை மரத்துடன் தொடர்பு கொண்டது. இந்த நட்சத்திரத்தின் கெட்ட கதிர்வீச்சுக்களை சுத்தம் செய்து ஆக்ஸிஜனாக மாற்றிக் கொடுக்கிறது வாகை. இந்த மரத்தைத் தினமும் தொட்டாலும், இதன் நிழலில் இளைப்பாறினாலும் கெட்ட கதிர் வீச்சுக்கள் நீங்கிவிடும். வாகை (வைகை) மரம், திருவாழ்கொளிபுத்தூர் ஸ்ரீவண்டமர் பூங்குழல் நாயகி (ஸ்ரீப்ரமா குந்தலாம்பாள்) சமேத மாணிக்கவண்ணர் (ஸ்ரீரத்னபுரீஸ்வரர்) சுவாமி ஆலயத்தின் தல விருட்சம். நாகை மாவட்டம், மயிலாடுதுறை தாலுகா, திருப்புன்னத்தூரிலிருந்து சுமார் 8 கி.மீ. தூரத்தில் உள்ள இந்தத் தலம், திருவாழப்புத்தூர் எனப்படுகிறது. அருகில் உள்ள இலுப்பைப்பட்டு தலத்துக்கு பாண்டவர்கள் வந்தனர். அவர்களில் அர்ஜுனன் மட்டும் மேற்கில் இருந்த வாகை மரக் காட்டில், ஒரு மரத்தடியில் போய் அமர்ந்தான். அவனுக்குக் கடும் தாகம். அப்போது முனிவர் ஒருவர் அங்கு வர, ''சுவாமி, தாகமாக இருக்கிறது. இங்கே தண்ணீர் எங்கு கிடைக்கும்?'' என்று கேட்டான். முனிவர், தன் கையிலிருந்த தண்டத்தினால் நீர் நிலை (தண்ட தீர்த்தம்) உண்டாக்கி, தண்ணீர் வழங்கியருளினார். உடனே அர்ஜுனன், தன்னுடைய உடைவாளை முனிவரிடம் கொடுத்து விட்டு, தண்ணீரை இரு கைகளாலும் அள்ளிக் குடித்தான். பின்னர் திரும்பிப் பார்த்தால், முனிவரைக் காணோம். முனிவரின் காலடிச் சுவட்டைத் தொடர்ந்து, தேடி அலைந்தான். முனிவராக வந்தது இறைவனே. அவர், ஒரு வாகை மரத்தடியில் புற்றில் இருந்த வாசுகி பாம்பிடம் உடைவாளை கொடுத்துவிட்டு, ஆலயத்தை அடைந்தார். பிறகு, இது இறை விளையாட்டு என உணர்ந்த அர்ஜுனனும் இறைவனை தொழுதான். அவனிடம் உடைவாளைத் தருமாறு வாசுகிப் பாம்பை பணித்தார் இறைவன். இதனால், இந்தத் தலம், 'திருவாள் அளி புற்றூர்’ என வழங்கலாயிற்று. பிறகு, திருவாழ் கொளிபுத்தூர் என்றாகி, தற்போது திருவாழப்புத்தூர் எனப்படுகிறது. கடும் பஞ்சத்தில் உலகம் தவித்தபோது, தானியங்கள், ரத்தினங்கள், மழை ஆகியவற்றைத் தந்தருளியதால் இங்கேயுள்ள இறைவனுக்கு ஸ்ரீரத்தினபுரீஸ்வரர் எனும் திருநாமம் அமைந்தது. இங்கேயுள்ள ஸ்ரீதுர்கை மிகவும் சாந்தமானவள். மகிஷாசுரமர்த்தினியாக அவதரித்தவள், வதம் முடிந்ததும், சாந்தம் கொண்ட தலம் இதுவாம்! ஸ்ரீபிட்சாடனர், ஸ்ரீநடராஜர், ஸ்ரீசிவகாமி, ஸ்ரீசனி பகவான் (இங்கு நவக்கிரகங்கள் இல்லை), வாசுகி பாம்பு ஆகியோர் அருளும் தலம் இது. இங்குள்ள வாகை மரத்தைச் சுற்றி வந்து வணங்கினால், குழந்தை பாக்கியம் உண்டாகும் என்கின்றனர். துர்கா பரமேஸ்வரி அசுரனை அழித்து வெற்றி பெற்ற அடையாளமாக தல விருட்சமான 'வாகை’ போற்றி வணங்கப்படுகிறது. வாகையின் இலைகளை அரைத்துக் கண்களில் வைத்துக் கட்டினால், கண் நோய்கள் குணமாகும். இதன் இலைகளைக் கஷாயமாக்கிச் சாப்பிட் டால், மாலைக்கண் நோய் சரியாகும். இதன் பூக்களை அரைத்து, பாம்புக்கடி விஷ முறிவுக்குப் பயன்படுத்துவர். தவிர, கட்டிகள், வீக்கங் களைக் குணமாக்கவும் வல்லது இது. வாகை மரப்பட்டை ரத்தமூலம், சீதபேதி ஆகியவற்றுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. இந்த மரத்திலிருந்து கசியும் பிசின், பெண்களின் வெள்ளைப்படுதல் முதலான நோய்களைக் குணப்படுத்துகிறது. உஷ்ண உடல் உள்ளவர்கள், வாகை மரத்தால் தயாரிக்கப்படும் மருந்துகளில் பசும் நெய் கலந்து சாப்பிட, உடற்சூடு தணியும். குறிஞ்சிப் பாட்டில், 'வடவனம் வாகை வான்பூங்குடசம்’ என வாகையைக் குறிப்பிட்டுள்ளனர். வெற்றி பெற்றவர்களை 'வாகை சூடியவர்கள்’ எனப் போற்றுகிறார் நச்சினார்க்கினியர். அடுத்தது, திருவோண நட்சத்திரத்துக்கான ஆலயம்...
பில்லி சூனியம் அகலும்! ''சாந்த சொரூபினியாக ஸ்ரீதுர்கை அருளாட்சி செய்யும் தலம் இது. ராகு காலத்தில் இவளை வணங்கினால், நவக்கிரக தோஷம் அகலும்; பில்லி சூனியம் விலகும்; கொடிய ரோகங்கள் நிவர்த்தியாகும்; பிள்ளை வரம் கிடைக்கும். இந்தத் தலத்து இறைவன் சந்நிதிக்கு முன்னே திருமணம் முடிப்பது விசேஷம். அவர்களுக்கு அனைத்துச் செல்வங்களையும் அருளுவார் ஈசன் என்பது ஐதீகம்'' என்கிறார் ஆலய அர்ச்சகர் நாகராஜ குருக்கள். -------------------------------------------------------------------------------- கல்வியாளர்கள், இசை விரும்பிகள், அறிஞர்கள், நறுமணப் பிரியர்கள், ஆடை- அணிகலன்கள் மீது விருப்பமுள்ளோர், தூய்மையாக இருக்க விழைவோர்... திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்களாகவே இருப்பார்கள். திருவோணம் நட்சத்திரம், மகர ராசி மற்றும் சனிக்கிரகம் ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டது. சனிக்கிழமை மற்றும் டிசம்பர் 21-ம் தேதி முதல் ஜனவரி 19-ம் தேதி வரை பிறந்தவர்களை திருவோண நட்சத்திரம் ஆட்சி செய்கிறது. இந்தத் தினங்களில் மேற்படி நட்சத்திரத்தின் கதிர்வீச்சுக்கள் பூமியில் அதிக அளவு இருக்குமாம். சரக்கொன்றை மரம் அவற்றைத் தனக்குள் சேமித்துக்கொண்டு, கெட்ட கதிர்வீச்சுக்களை நன்மை தரும் நல்ல கதிர் வீச்சுக்களாக மாற்றி விடுகிறது. பந்தநல்லூர் ஸ்ரீவேணுபுஜாம்பிகை சமேத ஸ்ரீபசுபதீஸ் வரர் கோயிலின் ஸ்தல விருட்சம்- சரக்கொன்றை. கும்பகோணத்தில் இருந்து சுமார் 27 கி.மீ. தொலைவில் உள்ளது இந்தத் தலம். கண்வ முனிவரும் தேவர்களும் வேண்டியபடி, இந்தக் கோயிலில் ஸ்ரீபரிமளவல்லித் தாயாருடன் ஸ்ரீஆதிகேசவப் பெருமாளும் தனிச் சந்நிதியில் அருள்கிறார். சுயம்பு மூர்த்தியாக புற்று வடிவில் ஸ்ரீபசுபதீஸ்வரர் எனும் திருநாமத்துடன் குடிகொண்டிருக்கிறார் சிவனார். புற்றின் மீது பசுவின் காலடி பட்ட சுவடும், அம்பிகை ஆடிய பந்தின் சுவடும் இன்றைக்கும் உள்ளன. அம்பாள்- ஸ்ரீவேணுபுஜாம்பிகை. அதாவது, மூங்கில் போன்ற தோள் அழகு கொண்டவள் என்று அர்த்தம். அம்பிகைக்கு, பந்து ஆடுதலில் விருப்பம் வந்து, சிவனாரை வேண்டினாள். அவளுக்கு நான்கு வேதங்களையும் பந்தாகத் தந்தருளினாராம் சிவபெரு மான். திருக்கயிலையில், தோழியருடன் பந்தாடினாள் பராசக்தி. அப்போது தன்னையே மறந்தாள். சூரியனும் அஸ்த மனம் ஆகாமல், நெடு நேரத்துக்கு ஒளி கொடுத்தான். விளையாட்டு வளர்ந் தது; பகலும் நீண்டது. இதில் உலகம் சோர்வுற்றது. விளையாட்டில் ஆழ்ந்த உமையவள் மீது கடும் கோபம் கொண்டார் சிவனார். அவள் ஆடிய பந்தினை எட்டி உதைக்க... அது பூமியில் வந்து விழுந்தது. பிறகு, தவற்றை உணர்ந்து மன்னிப்புக் கேட்டாள் அம்பிகை. அடுத்து ஈசனின் ஆணைப்படி பசுவாக மாறி, சரக் கொன்றை மர நிழலில், சுயம்புவாகத் தோன்றிய சிவலிங்கத் திருமேனிக்கு பாலைச் சொரிந்து வழிபட்டாள்; அந்தத் தலம் 'திருப்பந்தணைநல்லூர்’ என்றாகி, பிறகு 'பந்தநல்லூர்’ ஆனதாகச் சொல்கிறது ஸ்தல புராணம். இங்கு, திருமணக் கோலத்தில் இறைவனும் இறைவியும் காட்சி தருவது கொள்ளை அழகு! இங்கே, இறைவனின் திருமணத்தைக் கண்டு வழிபட்ட ஆனந் தக் களிப்புடன் நேர் வரிசையில் நிற்கிறார்கள் நவக்கிரகங்கள். இவர்களை வழிபட, கோள்களால் ஏற்படும் துயரம் அழியும் என்பது ஐதீகம்! வருடத்தில், ஆவணி மாதம் 19, 20, 21 தேதிகளில் இறைவன் திருமேனியில் சூரியக் கதிர் படும் அற்புதம் நிகழ்கிறது! வாய்ப்புண், தொண்டைப் புற்று ஆகியவற்றைத் தடுக்கும் சக்தி, சரக் கொன்றை மரத்துக்கு உள்ளது. இதன் இலைக் கொழுந்தை அரைத்துச் சாறாக்கி, சர்க்கரை கலந்து சாப்பிட்டால், வயிற்றில் உள்ள கிருமிகள், பூச்சிகள் வெளியேறிவிடும். இலையைத் துவையல் செய்தும், கடைந்தும் சாப்பிடலாம். அரைத்துப் படர்தாமரைக்குப் பூசலாம். கீல்வாதம் மற்றும் முகத்தில் வலிப்பு உள்ள இடங்களில் இலை யைத் தேய்க்கலாம். மூளைக் காய்ச்சலுக்கும் உகந்தது இது! சரக்கொன்றைப் பூவுக்கு புழுக்களைக் கொல்லும் திறன் உண்டு. பூவை தனியாகவோ அல்லது இலைக் கொழுந்துடனோ அரைத்து, பாலில் கலந்து உட்கொண்டால் வெள்ளை, வெட்டை, காமாலை நோய்கள் நீங்கும். பழச்சாற்றுடன் பூவை அரைத்துத் தேய்த்துக் குளித்தால், தேமல், சொறி ஆகியவை குணமாகும். பூவை பாலுடன் காய்ச்சி உட்கொண்டால், உடல் உறுப்புகள் வலுப்பெறும். சரக்கொன்றையால் தயாரிக்கப்படும் மருந்து, தடைப்பட்ட மாத விலக்கை வெளியேற்றும். கடலூர் மாவட்டம் திருவதிகை ஸ்ரீவீரட்டேஸ்வரர் கோயில், மதுரை மாவட்டம் திருப்பனூர் கொன்றை வேந்தனார் ஆலயம் உள்ளிட்ட பல ஆலயங்களின் தலவிருட்சம்- சரக்கொன்றையே! வியாபாரம் சிறக்கும்! ''இது, பித்ரு சாப நிவர்த்தி ஸ்தலம். கண் பார்வைக் குறைபாடுகளை நீக்கியருளும் தலமும்கூட! சொத்து வழக்கில் நியாயம், கடன் பிரச்னை, தொழில் விருத்தி ஆகியவற்றைத் தந்தருள்கிறார் ஸ்ரீபசுபதீஸ்வரர். வித்தை, கல்வி, குழந்தைப்பேறு ஆகியவற்றை ஸ்ரீவேணுபுஜாம்பிகை வழங்குகிறாள்'' என்கிறார் ஸ்ரீபசுபதீஸ்வரர் கோயிலின் ராஜசேகர குருக்கள் ''ஸ்ரீமுனீஸ்வரருக்கு ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் உண்டு. செய்வினை, ஏவல், பில்லி சூனியம் அகற்றும் சக்தி வாய்ந்தவர் முனீஸ்வரர்'' என்று சொல்லிச் சிலிர்க்கிறார் குருக்கள்.

அஸ்வினி நட்சத்திரம்

அஸ்வினி நட்சத்திரம், மூன்று தாரங்களை (தாரைகளை) உள்ளடக்கியது; குதிரை வடிவம். ராசி புருஷனின் சிரசில் இடம் பிடித்த நட்சத்திரம். எண்ணிக்கையில் முதலாவது நட்சத்திரமும் இதுவே! இதன் தேவதை, அஸ்வினி தேவர்கள். தேவலோக மருத்துவர்கள்; தேவர்களுக்குச் சுகாதாரத்தை அளிப்பவர்கள். வேள்வியின் சிரம் துண்டிக்கப்பட்டது. மருத்துவ இரட்டையர்களான அஸ்வினி தேவர்களுக்குக் கட்டளையிட்டான், இந்திரன். அவர்கள், உடலையும் தலையையும் ஒட்டவைத்தனர். வேள்வி உயிர் பெற்றது. அந்த வேள்வியின் மூலமாக, தேவர்களுக்கு உணவு தடங்கலின்றி வந்து சேர்ந்தது என்கிற தகவல் வேதத்தில் உண்டு (யஞ்யஸ்யசிரோச்சித்யத...). தேவர்களின் அருளுடன் இணைந்தது அஸ்வினி நட்சத்திரம். நம் உடலில், கைகளில் வலிமை, அவர்கள் அருளில் வலுப்பெறும் என்கிறது வேதம் (அச்வினோர் பாஹீப்யாம்). நட்சத்திரங்கள் ஒவ்வொன்றும் நான்கு பாதங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கும். 27 நட்சத்திரங்களையும் நான்கு பாதங்களாகப் பிரிக்கும் போது, 108 நட்சத்திர பாதங்களாக விரிவடையும். 12 ராசியிலும் அது பரவியிருப்பதால், அதன் தாக்கம் ராசிகளுக்கு ஊக்கம் அளிக்கும். 1 0 8=9 கிரகங்களும் நட்சத்திர பாதங்களுடன் இணைந்து, பலனை இறுதி செய்யும். 108-ல் ராசிச் சக்கரம் முழுமை பெற்றதால் 108 தடவை அர்ச்சனையை முழுமை பெற்றதாக ஏற்கிறோம். அஸ்வினியில், முதல் பாதத்தில் செவ்வாய் இணைந்திருப்பான். இரண்டில் சுக்கிரனும் மூன்றில் புதனும் நான்கில் சந்திரனும் இருப்பார்கள். நட்சத்திர பாதங்கள் நவாம்சத்தை உருவாக்கி, பலன் சொல்லுவதில் மாறுதலைத் தோற்றுவிக்கின்றன. ஒவ்வொரு நட்சத்திர பாதத்துடன் இணைந்த கிரகங்கள், பாதத்துக்குப் பாதம் மாறுபட்ட பலனைச் சுட்டிக்காட்டுவதால், ஒரே நட்சத்திரத்தில் பிறந்தாலும், அவர்களின் இயல்பில் மாறுபாட்டுக்குக் காரண மாகிறது. அஸ்வினி முதல் பாதத்தில் பிறந்தவன், அம்சகத்தில் மேஷத்தில் வருவதால், அம்சகத்திலும் ராசியிலும் சந்திரன் மேஷத்தில் இருப்பதால், அவனுக்கு வர்கோத்தமம் எனும் தகுதி உண்டு. (சுபம் வர்கோத்தமேஜன்ம). அதை ஏற்படுத்தியது நட்சத்திர பாதம். ராசியிலும் அம்சகத்திலும் செவ்வாயுடன் இணைந்திருக்கும் பெருமை பெற்றதால், அவனுடைய பிறப்பின் தகுதி சிறப்பு பெற்றுத் திகழ்கிறது. மற்ற கிரகங்களுடன் ராசியும் சேர்ந்து, நட்சத்திர பாதம் இணைந்திருந்தாலும் வர்கோத்தமத்தின் பங்கு வலுப்பெற்றிருப்பதால், பலன் சொல்லும் விஷயத்தில் நட்சத்திரத்தின் பங்குக்கு முக்கியத்துவம் இருப்பதைத் தெரிவிக்கிறது ஜோதிடம். லேசான, அதாவது கனம் குறைந்த நட்சத்திரங்களில் அஸ்வினியும் ஒன்று. 64 கலைகள், குறிப்பாக பொதுக்கல்வி, கிரய - விக்ரயம் (பல்பொருள் அங்காடி), பொருளாதாரத்தை வலுவாக்குதல், கைவேலைப்பாடுகள், மருந்து வகைகள், பயணம் ஆகியவற்றுக்கு அஸ்வினி நட்சத்திரத்தின் இணைப்பு, வெற்றிக்கு வழி வகுக்கும் என்கிறார் வராஹமிஹிரர் (லகுஹஸ்தாச்வின...). முற்பிறவியின் கர்மவினையே, உடலெடுக்கக் காரணமாகிறது. வருகின்ற இன்ப - துன்பங்களுக்குத் தக்கபடி, ஒருவரின் தோற்றம் இருக்கும். பிறக்கும் வேளையில் உள்ள நட்சத்திர பாதத்தின் இணைப்பு, வரக்கூடிய இன்ப - துன்பங்களுக்கு ஆதாரமாகிவிடும்! அழகிய தோற்றம், ஆடை-அணிகலன்களில் ஆர்வம், அன்புடன் பழகுகிற பண்பு, காரியத்தில் நேர்த்தி, தெளிவான சிந்தனை ஆகியவை அஸ்வினி நட்சத் திரத்தில் தோன்றியவரின் இயல்பு! அவர்கள், சிந்தனை வளத்துடனும் சுகாதாரத்துடனும் இருப்பார்கள். மருத்துவ ஆர்வம், கொடை வழங்கும் இயல்பு, பொருளாதாரம், வேலைக்கு ஆட்கள், மனைவி என அனைவரையும் இணைத்துக் கொண்டு, அரவணைத்த படி செயல்படும் திறமைசாலிகள் என்கிறார் பராசரர் (விஞ்ஞானவானரோகி). முதல் பாதத்தில் பிறந்தால், பிறர் பொருள் மீது ஆசைப்படுவர். இரண்டாவதில் பிறந்தால், உடல் உழைப்பைக் குறைத்துக் கொள்வர். மூன்றாவதில், எல்லோருக்கும் பிரியமாக இருப்பர். நான்காவதில், நீண்ட ஆயுளுடன் வாழ்வர் என 4 பாதங்களுக்கும் தனித்தனி பலனைச் சொல்லியுள்ளார் வராஹமிஹிரர். பாதத்துக்குப் பலன் சொல்லும் விஷயத்தில், அதில் இணைந்த குறிப்பிட்ட கிரகத்தின் தாக்கத்தால், இயல்பு மாறுபட வாய்ப்பு உண்டு. ஆகவே, பாத பலன்... நம்பிக்கைக்கு உகந்தது! அஸ்வினி முதல் பாதத்தில் பிறந்தவன் மேஷ ராசி. மேஷத்துக்கு அதிபதி, செவ்வாய். முதல் பாதத் திலும் செவ்வாய் தனிப்பட்ட முறையில் இணைந்திருப்பான். அவனுடைய பூர்வ புண்ணிய ஸ்தானம் (5) சிம்மம். அதில் முதல் நட்சத்திரம், மகம். முதல் பாதத்தில் செவ்வாயின் தொடர்பு உண்டு. அவனுடைய அதிர்ஷ்டம், 9-வது (தனுர்) ராசி; அதில் முதல் நட்சத்திரம் மூலம். அதன் முதல் பாதத்துக்கு செவ்வாயின் தொடர்பு உண்டு. பிறந்த நட்சத்திர பாதம், ஒருவரின் பூர்வ புண்ணியத்தைத் தெரிவிக்கும் நட்சத்திர பாதம், அதன் செழிப்பை வரையறுக்கும் அதிர்ஷ்டம் (கண்ணுக்குப் புலப்படாத பூர்வ புண்ணியம்), அதைச் சுட்டிக்காட்டும் நட்சத்திர பாதம் ஆகியவை செவ்வாயுடன் இணைந்திருப்பதால், ஆசைக்குக் கட்டுண்டு, எதையும் ஆராயாமல், சடுதியில் செயல்பட்டு, பிறர் பொருளைக் கவருவதிலும் ஒருவித துணிச்சல் ஏற்பட்டுவிடும். அஸ்வினி, மகம், மூலம் ஆகிய மூன்றில், 1,5,9 ஆகிய பாவங்கள் தென்படுவதால், நூல் பிடித்தது போல் தொடர்பு இருப்பதால், இந்த மூன்றுக்கும் ரஜ்ஜு என்ற பெயரைப் பயன்படுத்தினார்கள்! இரண்டு, மூன்று மற்றும் நான்காவது பாதங்கள், மாறுபட்ட கிரகங்களுடன் இணைந்திருப்பதால், ஒரே நட்சத் திரமானாலும் பாதத்துக்கு மாறுபட்ட பலனை அளிக்க கிரகங்களின் பங்கு உதவுகிறது. இந்த மூன்று நட்சத்திரங் களுக்கும் கேது தசை ஆரம்பம் என்கிறது ஜோதிடம். பலன் சொல்லும்போது (குஜவத்கேது:), அதாவது செவ்வாய்க்கு உகந்த பலனை ஏற்கச் சொல்கிறது ஜோதிடம். மூன்று நட்சத்திரங் களிலும் முதல் பாதத்தில் செவ்வாயின் இணைப்பு, பலனை செவ்வாயுடன் இணைத்துச் சொல்லவும் பரிந்துரைக்கிறது. பிறப்பின் வேளையுடன் (லக்னம்) முதல் பாதம், மிகவும் நெருங்கி இருப்பதால், தசாகாலத்தை நிர்ணயிப்பதில் நட்சத்திரத்துக்கு முன்னுரிமை அளித்தது ஜோதிடம். கிரகங்களின் உயிரோட்டத்துக்கு நட்சத்திர பாதங்களின் இணைப்பு அவசியம். பலனை இறுதி செய்ய நட்சத்திர பாதத்தை எதிர்பார்க்கும் கிரகங்கள். ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி சனி என அத்தனை கிரகங்களும் ஒவ்வொரு நட்சத்திரத்திலும் இணைந்திருக்கும். ராசி, ஹோரா, த்ரேக்காணம், ஸப்தமாம்சம், நவாம்சம், தசாம்சம், த்ரிம்சாம்சம் ஆகிய பிரிவுகளில் அத்தனை கிரகங்களுடைய இணைப்பும் கிடைத்துவிடும். ஒட்டுமொத்தமான கிரகங்களையும் தன்னில் அடக்கிக் கொண்டு, அதன் தரத்துக்கு உகந்த முறையில், தன் பங்கையும் சேர்த்துப் பலன் அளிக்கும் பொறுப்பு, நட்சத்திரத்துக்கு உண்டு. பூர்வ ஜன்ம கர்மவினையின் வடிகாலாக நட்சத்திரங்கள் செயல்படுகின்றன. 12 ராசி களிலும் பரவலாக எல்லா கிரகங்களும் இணைந்திருந்தாலும் கர்மவினையின் பலனை வரிசைப்படுத்த நட்சத்திரத்தின் துணையை நாடுகின்றன எனும் தகவல், நட்சத்திரங்களின் சிறப்புக்குச் சான்று. பிறப்பெடுத்த ஒருவர், பல பொருட்களுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு இன்ப - துன்பத்தை ஏற்கிறார். தசா புக்தி அந்தரங்கள், அவற்றை நடைமுறைப்படுத்துகின்றன என்பது உண்மை. ஆனாலும் எது முந்தி, எது பிந்தி என்கிற அட்டவணையை நட்சத்திரங்களே வரையறுக்கின்றன. வாழ்வின் துவக்கத்தில், சிலருக்கு இன்பமும் சிலருக்கு துன்பமும் ஏற்பட தசைகளின் அட்டவணை காரணமாகிறது. அந்த அட்டவணைக்குக் காரணம், நட்சத்திரம். எனவே, கர்மவினையை வெளியிடும் கருவியாகச் செயல்படுகின்றன நட்சத்திரங்கள்! மிருதுவான (லேசான) அஸ்வினியின் இணைப்பு எல்லா சுபகாரியங்களுக்கும் சிறப்பைச் சேர்க்கும். முகூர்த்தங்கள் அல்லாத அலுவல்களுக்கும் அது வலுவூட்டும். ராசி புருஷனின் தலை மேஷ ராசி. அதில் இணைந் திருப்பது அஸ்வினி. சிந்தனையுடன் செயல்படும் திறமையை அளிக்கும் அது, விபரீதமான கிரகங்களுடைய சேர்க்கை வலுப்பெற்றிருக்கும் போது, சிந்தனை மங்கிச் செயல்பட முடியா மல் செய்யவும் வாய்ப்பு உண்டு! தவிர, பூர்வ ஜன்ம வினையை அளப்பது 5-ஆம் இடம்; அதன் அளவை வரையறுப்பது 9-ஆம் இடம்! இவற்றின் விபரீதமான போக்கு, நட்சத்திரத்தின் தனிப்பலனை முடக்கிவிடும். நட்சத்திரங்களோ கிரகங்களோ, தனியாகவோ ஒன்று சேர்ந்தோ தன்னிச்சையாக பலன் அளிக் காது. கர்மவினையின் பலனை வெளிப்படுத்தி நடைமுறைப்படுத்துவதுதான் அதன் வேலை. ஆகவே அவற்றுக்கு சுதந்திரம் இல்லை! உச்சம், நீசம், மூல த்ரிகோணம், வர்கோத்தமம், ஸ்வக்ஷேத்திரம், அஸ்தமனம், மௌட்யம், வக்ரம் போன்ற கிரகங்களின் நிலைகள், கர்மவினையின் தரத்துக்கு உகந்த பலன் அளிப்பதை வரையறுக்கின்றன. பிறக்கும் வேளையில் அமைந்த கிரகங்களின் தரத்துக் குக் காரணம், ஒருவரது கர்மவினை. இதன் வெளிப்பாட்டுக்குத் தக்கபடியே கிரகங்கள் செயல்படும். நட்சத்திரங்களும் அவ்விதமே செயல்படும்! ஆகவே, நட்சத்திரங்களை வழிபட்டு, கர்மவினையை செயல்படாமல் தடுக்க முற்பட்டு, துன்பத்தில் இருந்து வெளிவர வேண்டும். பூஜை, தியானம், வழிபாடு போன்றவை தவறான கர்மவினையை (பாபத்தை) கரைத்து விடும். நட்சத்திரங்களும் கிரகங்களும் இல்லாத (கரைந்த), கர்மவினையை நடைமுறைப்படுத்தாது. போதிய எண்ணெய் விட்டு, திரியைப் போட்டு, விளக்கேற்றுகிறோம். திரியின் நுனியில் இருக்கும் ஒளி, திரியை அழிக்காமல், திரி வழியே எண்ணெயின் தொடர்பில், எரிந்து கொண்டிருக்கும். அதில் இருக்கும் எண்ணெயை முழுமையாகத் துடைத்தெடுத்துவிட்டால், திரியை எரித்து, தானும் எரிந்துவிடும். அதேபோல, சேமித்த விபரீத கர்மவினையை, பரிகாரங்களால் அழித்துவிட்டால், திறமையான கிரகங்களும் செயலிழந்துவிடும். ஆகவே, மனதின் செயல்பாட்டைத் திருப்பிவிட்டு, பூஜை புனஸ்காரங்களில் ஈடுபட வைக்கும் தருணத்தில், தப்பான கர்மவினை கரையாமல் இருந்தாலும், சிந்தனையில் நுழைய அவகாசமின்றிப் போய்விடும். அப்போது, துயரம் தொடாமல் இருந்துவிடும். அஸ்வினி நட்சத்திரத்துக்கு தொடர்பு உடைய அஸ்வினி தேவர்களை வழிபட வேண்டும். 'அம் அச்வினீ குமாராயநம:’ என்று சொல்லி வழிபடலாம். அல்லது 'அச்விப்யாம் நம:’ என்று சொல்லி வணங்கி வழிபடலாம். காலையில் எழுந்ததும் அவனுடைய நாமத்தை மனதில் நிறுத்தி வேண்டிக் கொண்டு, அன்றைய கடமையில் இறங்குங்கள். அஸ்வினி தேவர்கள், உங்களுக்கு சுகாதாரத்தையும் ஆரோக்கியத்தையும் தந்தருள்வார்கள்!

திங்கள், 8 ஆகஸ்ட், 2011

கிரகங்களின் நாயகன் சூரியன்

கிரகங்களின் நாயகன் சூரியன். ஒளி வடிவானவன்; பார்வைக்கு இலக்காகும் பரம்பொருள், அவன் (சூர்ய:ப்ரத்யஷதேவதா). 'உலகின் அணையா விளக்கு’ என்பார் வராகமிஹிரர் (த்ரைலோக்ய தீபோரலி:). சூரியனது கிரணங்களே, மற்ற கிரகங்களை இயக்க வைக்கிறது. காலை, மதியம் மற்றும் அந்தி சாயும் வேளைகளில் அவனை ஆராதிப்பது சிறப்பு என்கிறது வேதம். மேலும், சராசரங்களின் ஆன்மா என சூரியனை அடையாளம் காட்டு கிறது வேதம் (ஸ¨ர்யஆன்மாஜகத: தஸ்துஷ:ச).  
சூரியன், உலகை உணர்த்துகிறான்; இயங்க வைக்கிறான்; உறங்க வைக்கிறான் என்கிறது ஜோதிடம் (லோகானாம் பிரளயோதயஸ்திதிவிபு:). 'அவன் தோன்றும் போது உயிரினங்களுக்கு உயிரூட்டுகிறான். மறையும் வேளையில், உறக்கத்தில் ஆழ்த்தி இளைப்பாறச் செய்கிறான்’ என்கிறது வேதம் (யோஸெளதபன்று தேதி...). மும்மூர்த்திகளும் அவனுள் அடக்கம் (விரிஞ்சிநாராயணசங்கராத்மனே). முத்தொழில்களையும் அவனே நடத்துகிறான். வேதத்தின் வடிவமான ஒலி, ஆகாயத்தில் ஒளி வடிவில் உலா வருகிறது. அதுவே சூரியன் என்கிறது வேதம் (வேதை:ஆசூன்ய: த்ரிபி: ஏதிசூர்ய:).
சூரிய வழிபாடு சுகாதாரத்தை நிலை நிறுத்தும் (ஆரோக்யம் பாஸ்கராதிச்சேத்). நம் கண்களுக்குப் பார்க்கும் திறன் உண்டு. ஆனாலும், அவனது ஒளியின் துணையுடன்தான் பார்க்க இயலும். தினமும் சூரிய நமஸ்காரம் செய்து வந்தால், கண் ஆஸ்பத்திரிக்குச் செல்ல வேண்டியிருக்காது. பூதவுடலை, பெரும்பூதங்களுடன் இணைக்கும் போது, கண்கள் சூரியனில் இணையட்டும் என்கிறது வேதம் (ஸ¨ர்யம் தெசஷூர்கசகது).


தோற்றம்- மறைவு இல்லாதவன் சூரியன். ஒளிப்பிழம்பாகத் தோன்றுபவன் அவன். நம் கண்களுக்குத் தென்படுகிறபோது, 'சூரியன் தோன்றுகிறான்’ என்கிறோம். தென்படாதபோது, 'சூரியன் மறைந்துவிட்டான்’ என்கிறோம். ஆனால், அப்போது சூரியன், வெளிநாட்டில் தோன்றுகிறான். சூரியன், தோன்றி மறைகிற இடைவெளியை பகலாக ஏற்கிறோம்; அன்றாட அலுவல்களை அவனை வைத்தே நிர்ணயம் செய்து கொள்கிறோம். நாட்கள், வாரங்கள், மாதங்கள், வருடங்கள் ஆகிய அனைத்தும் சூரியனை வைத்துத் தீர்மானிக்கப் பட்டவையே! சூரியனின் கிரணம் படாத இடமே இல்லை. கிரணம் பட்டு, அதன் தாக்கத்தால் பொருளில் தென்படும் மாற்றங்களைக் கொண்டு உருவானதே காலம்; அதாவது வேளை என்கிறது வேதம் (தஸ்யா:பாகவிசேஷேண ஸ்மிருதம்காலவிசேஷணம்). சூரியனின் செயல்பாட்டின் அளவே கால அளவாக மாறியது. ஓய்வில்லாமல் செயல்பட்டுக் கொண்டிருக்கிற சூரியனைப் பார்த்து, கர்மமே கண்ணாக இருக்கவேண்டும் என்கிறது வேதம் (ஸ¨ர்யஏகாகீசரதி).

இருண்ட சந்திரனுக்கு ஒளியை வழங்குபவன் சூரியன். நட்சத்திரங்களும் மற்ற கிரகங்களும் இவனது ஒளி பட்டு மிளிருகின்றன. ஒளியை வெளியிடும் அனைத்துப் பொருட்களும் சூரியனிடம் இருந்து ஒளியைப் பெற்றவையே! இருளில் ஒளிந்திருக்கிற பொருளை அடையாளம் காட்டுகிறது வெளிச்சம். ஒளிந்திருக்கிற கர்ம வினையை அடையாளம் காட்டுகிறது, இவனுடைய வெளிச்சம் (தமஸித்ரவ்யாணிதீபஇவ). மற்ற கிரகங்களும் இவனுக்குத் துணை போகின்றன. இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய அனைத் தும் சூரியனை வைத்தே நிகழ்கின்றன. அதாவது, முற்பிறவியில் நம் செயல்பாட்டைக் கண்காணித்தவன் அவன். இந்தப் பிறவியிலும் அதனைத் தொடர்கிறான். எதிர்காலத்திலும் தொடருவான்.
ஆக, முக்கால நிகழ்வுகளுக்கு அவனே சாட்சி! 'முக்காலத்திலும் நிகழ்கிற பலன்களை வெளியிடும் தகுதியை எனக்கு அளித்து அருளுங்கள்’ என வராகமிஹிரர் சூரிய பகவானை வேண்டுகிறார் (வாசம்ந: ஸததாதுறைககிரண: த்ரைலோக்யதீபோரலி:).
நம் உடலில் உள்ள சூடு, அவனுடைய பங்கு. அவனுடைய வெப்பம், பொருளில் அதன் இயல்பை வெளிக்கொண்டு வர உதவும்.
மாறிக்கொண்டே இருக்கிற உலகில், அதனை நடைமுறைப் படுத்துபவனே சூரியன்! சூரியனின் கிரணம், பனியை உருக வைக்கும். சேற்றில் இருக்கும் தண்ணீரை உறிஞ்சி, கட்டியாக்கும்; தாமரையை மலரச் செய்யும்; ஆம்பலை வாட வைக்கும். இலைகளைக் காயச் செய்யும்; ஈரத்தை உலரவைக்கும். வெப்பம் ஏறிய புழுக்கத்தில், ஈசல் போன்ற உயிரினங்களைத் தோற்றிவைக்கும். பொருளின் இயல்புக்கு உகந்தபடி, மாறுபாட்டை ஏற்படுத்தும்! கர்மவினையின் இயல்பை ஒட்டி, மாறுபாட்டை நடைமுறைப்படுத்தும். மாறுபாட்டை வெளிப்படுத்த மாறுபட்ட கிரகங்களை துணைக்கு அழைத்துக் கொள்வான், சூரியன்.
அவனுடைய வெப்பம், குளிர்ச்சியை சந்தித்த சந்திர கிரணத் துடன் இணைந்து ஆறு பருவ காலங்களை உருவாக்குகிறது. தட்பவெட்பங்கள்தான் உலகச் சூழல் என்கிறது சாஸ்திரம் (அக்னீஷோமாத்மகம்ஜகத்). இடைவெளியை (ஆகாசத்தை) நிரப்பும் இந்த இரு பொருள்களின் மூலாதாரம் அவன் என்கிறது வேதம் (விச்வான்யயோ...). மோட்சத்தின் நுழைவாயில் சூரியன் என்கிறார் வராகமிஹிரர் (வர்த்மாபுனர்ஜன்மனாம்). அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கு புருஷார்த்தங்களைப் படிப்படியே அடையச் செய்பவன் சூரியன்! கர்மத்தை முற்றிலும் துறந்த துறவியும், கர்மமே கடவுள் என அதில் ஒட்டிக் கொண்டு போராடும் வீரனும் சூரிய மண்டலத்தைப் பிளந்து, வீடுபேறு அடைகின்றனர் என்கிறது புராணம் (த்வாமிமௌபுருஷெளலேகே...).
ஒளிப்பிழம்புகள் ஜோதிடத்துக்கு ஆதாரம். சூரியன், ஒளிப்பிழம்பு.
அவனிடம் இருந்து ஒளியைப் பெற்ற சந்திரனும் ஒளிப்பிழம்பு. நட்சத்திரங்களும் ஒளி வடிவானவை என்கிறது வேதம் (ஜ்யோதிரிதி நஷத்ரேஷீ). கண்ணுக்குப் புலப்படும் சாஸ்திரம் ஜோதிடம். அதற்கு, சூரியனும் சந்திரனும் சாட்சி என்கிறது ஜோதிடம் (பிரத்யஷம் ஜ்யௌதிஷம் சாஸ்திரம் சந்திரார்க் கௌயத்ர ஸாக்ஷிணௌ). கிரகங்க ளின் கூட்டத்துக்கு சூரிய- சந்திரர்கள் அரசர்கள் என்கிறது ஜோதிடம். தேவர்களின் கூட்டத்துக்கு மன்னர்கள் என்கிறது வேதம். சூரியனும் சந்திரனும் இன்றி, வேள்வி இல்லை என்றும் தெரிவிக்கிறது அது (யதக்னீ ஷோமாவந்தரா தேவதா இஜ்யேதே)
வேதத்தின் மறுவடிவம்; வேள்விக்கு ஆதாரம்; ஜோதிடத்தின் அடிப்படை; விஞ்ஞானத்தின் எல்லை; மெய்ஞ்ஞானத்தின் நிறைவு; அன்றாடப் பணிகளின் வழிகாட்டி... என நம்முடன் இணைந்த கிரகம் சூரியன். கிரணம் மூலமாக நம்மில் ஊடுருவி, உடல் மற்றும் உள்ளத்தைப் பாங்குடன் ஒருசேர வளர்ப்பதில் சூரியனுக்குப் பங்கு உண்டு. இயற்கையின் செயல்பாடு, அவனது ஆணைக்கு உட்பட்டது. சூரியனைத் தவிர, மற்ற கிரகங்கள் 'ஜடங்கள்’; தானே செயல்படும் தகுதியற்றவை. சூரியனது இணைப்பில், அவை செயல்படும் தகுதியைப் பெறுகின்றன. நமது மனம், 'ஜடம்’; ஆன்மாவின் இணைப்பில் செயல் படும் (ஆன்மாமனஸாஸிம்யுஜ்யதே). கர்மவினை ஜடம்; சூரியனது இணைப்பில் செயல்படும். புத்தியின் செயல்பாடு கர்மவினைக்கு உட்பட்டது என்கிறது சாஸ்திரம் (புத்தி: கர்மானுஸாரிணீ). சூரியன், ஆன்மா; ஆகவே அவன் எதிலும் ஒட்டமாட்டான். அதன் தொடர்பில், மற்றவை செயல்படும். சூரியனது தொடர்பில் மற்ற கிரகங்கள், கர்மவினையை வெளிப்படுத்துகின்றன.
சிம்மத்துக்கு அதிபதியாக சூரியனைச் சொன் னாலும், அத்தனை ராசிகளிலும் சூரியன் (ஆன்மா) நிறைந்திருக்கிறான். எண்ணக் குவியல்களின் தொகுப்பை மனம் என்கிறோம். மன சஞ்சல இயல்பு, சந்திரனுக்கும் உண்டு (சஞ்சலம்ஹிமன:பார்த்த). சந்திரனுக்குக் கடகம் என்று சொன்னாலும், எல்லா ராசிகளிலும் நிறைந்திருக்கிறான், அவன்! 'ஹோரா’ என்கிற பெயரில், எல்லா ராசிகளிலும் இரண்டு பேரும் சம பங்கில் நிறைந்திருப்பதாகச் சொல்கிறது ஜோதிடம். இந்த இரண்டுபேரின் தொடர்புடன் ராசி நாதனான மற்ற கிரகங்கள் செயல்படுகின்றன.
ஆன்மாவும் மனமும் இணைந்தால் மட்டுமே புலன்கள் செயல்படும். ஜீவாத்மா வெளியேறிய பிறகு, மனம் இருந்தும் உடல் இயங்குவதில்லை. ஒவ்வொரு ராசியும் ஆன்மாவுடன் இணைந்த மனம் படைத்த உடலாகவே செயல்படுகிறது. த்ரேக்காணம்,  ஸப்தமாம்சம், நவாம்சம், தசாம்சம், த்ரிம்சாம்சம் ஆகிய ராசியின் உட்பிரிவுகளில் மற்ற கிரகங்களும் சேர்ந்திருக்கும். ஒவ்வொரு ராசியிலும் எல்லா கிரகங்களின் பங்கு இருக்கும். ராசிச்சக்கரத்தில் சூரியனின் ஊடுருவல், அத்தனை கிரகங்களையும் செயல்பட வைத்து, நன்மை தீமைகளை, கர்மவினைக்குத் தக்கபடி, நடைமுறைப் படுத்த வைக்கிறது. சூரியனின் வெப்பம் ஏறும்போதும் இறங்கும்போதும், நாம் படாதபாடு படுகிறோம். நீரை உறிஞ்சுபவ னும் மழையைப் பொழியச் செய்பவனும் அவனே (ஆதித்யாத்ஜாயதெவிருஷ்டி:). இன்பத்தை அளிப்பதும் துன்பத்தைச் சுமக்க வைப்பதும் சூரியனே! இயற்கையின் சட்ட திட்டங்களில், இவனது பங்கு உண்டு.
இயற்கையில் தோன்றிய சாஸ்திரம், ஜோதிடம். ஆகவே அதற்கு அழிவில்லை. பிரளயம் முடிந்து, புதிய படைப்பு துவங்கும் போது, பிரளயத்துக்கு முன்பு இருந்த சூரியனையும் சந்திரனையும் அப்படியே தோற்றிவைக்கிறார் கடவுள் என்கிறது வேதம் (சூர்யா சந்திரம ஸெள தாதா யதாபூர்வம கல்பயத்). இனப்பெருக்கத்துக்குக் காரணமான ராசிபுருஷனின் 5-ஆம் வீடான சிம்மத்தை அவனது ஆட்சிக்கு உட்பட்டதாகச் சொல்கிறது ஜோதிடம். தன்னம்பிக்கை, துணிச்சல், வீரம், பெருந் தன்மை, அலட்சியம், பொறுமை, அபிமானம் ஆகியவை சிம்மத்துக்கு உண்டு; சூரியனுக்கும் உண்டு. பொருட்களின் தோற்றத்துக்கு அவனது வெப்பம் வேண்டும். எனவே, அவனை பித்ருகாரகன் என்றும் சொல்வர். அவனுடன் இணைந்த கிரகங்கள் அனைத்தும் வலுப்பெறும். ஆன்ம சம்பந்தம் இருப்பதால், திறமை வெளிப்படும். அவனது கிரணத்தில் மூழ்கி, உருத்தெரியாமல் மங்கி விடுவதும் உண்டு. சூரியனுடன் இணைந்த புதன், சிந்தனை வளத் தைப் பெருக்குவான். அதனை நிபுண யோகம் எனப் பெருமைபடத் தெரிவிக்கிறது ஜோதிடம். ஆனால், அவனுடன் முற்றிலும் ஒன்றினால் (அஸ்தமனம்) விபரீத பலனைத் தந்து, துயரத்தைச் சந்திக்க நேரிடும்.
குருவுடன் சேரும்போது, ஆன்மிக நெறியைத் தந்தருள்வான். செவ்வாயுடன் இணையும்போது, உலகவியலில் திளைத்து, சிறப்பான செயலால் பேரும் புகழும் பெற்றுத் திகழலாம். சந்திரனுடன் இணைந்தால், மனத்தெளிவை ஏற்படுத்துவான். சுக்கிரனுடன் இணைந்தால், தாம்பத்தியத்தை இழக்க நேரிடும். சனியுடன் இணைந்தால், தரம் தாழ்ந்த செயலில் ஈடுபட்டு, செல்வ வளம் பெற்றாலும், செல்லாக்காசாக மாற நேரிடும். ராகுவுடன் சேர்ந்தால், வீண்பழி, அவப்பெயர்தான் மிஞ்சும். பலவீனமான மேகம், சில தருணங்களில் சூரியனின் ஒளி பரவாமல் தடுப்பது உண்டு. அதேபோல், ஒளிப்பிழம்பான சூரியனை, இருள் கிரகம் மறைப்பதும் உண்டு. கேதுவுடன் சேர்ந்தால், வசதி இருந்தும் அனுபவ அறிவு இல்லாது போகும்! வசதி உலகவியலில் அடங் கும்; சுகம், மனம் சார்ந்த விஷயம். ஒன்றை அழித்து மற்றொன்றை அளிக்க வைப்பான்.  உச்சம், ஸ்வஷேத்திரம் போன்ற நிலைகளில் சூரியன் இருந்தால்,  செல்வாக்கு மிகுந்தவனாக மாற்றிவிடுவான். அவனது தனித்தன்மையை அழியாமல் காப்பாற்றுவான்.
நீசம், சத்ருஷேத்திரம் ஆகிய நிலைகளில் இருந்தால், விழுந்து விழுந்து வேலை செய்தாலும், தகுதி இருந்தும் சிறக்க முடியாது போகும்! சமூகத்தில் அங்கீகாரம் இருக்காது. பலம் பொருந்திய குரு, புதன் ஆகியோருடன் இணைந்தால், சிந்தனை வளம் பெருகும்; தன்னம்பிக்கை பிறக்கும்; மக்கள் சேவை யுடன் திகழலாம்; புகழுடன் வாழலாம்! ஆன்ம காரகனின் தொடர்பு, பலன்களைச் சுவைக்கத் துணை புரியும். சூரியனும் சந்திரனும் பலம் பெற்றிருந்தால், மற்ற கிரகங்களின் தாக்கத்தை, அதனால் விளையும் சங்கடங்களை எளிதாகக் கடந்துவிடலாம். ஆன்ம பலத்தில் மனம் வலுப்பெற்றால், எல்லா இன்னல் களில் இருந்தும் விடுபடுவது எளிது.
மகான்கள் மனோபலம் மற்றும் ஆன்ம பலத்தால் காரியத்தை சாதித்துக் கொள்வார்கள். அந்த மனோபலத்தை சூரியனிடமிருந்து பெற வேண்டும். சந்திரன், சூரியனிடமிருந்து பலம் பெறுகிறான். தேசத்தோடு இணைந்து பிறந்தவனின் வேளை (லக்னம்) சூரியனை வைத்து நிர்ணயிக்கப்படு கிறது. வாரம், திதி நட்சத்திரம், கரணம், யோகம் ஆகிய ஐந்து கால அளவுகளுக்கு சூரியனின் பங்கும்
உண்டு. ஆன்ம சம்பந்தம் இல்லாத உடலுறுப்புகள், இயங்காது. நேரடி யாகவோ பரம்பரையாகவோ ஆன்ம காரகனின் சம்பந்தமின்றி, கிரகங்கள் இயங்காது. சூரியன் தன்னிச்சையாக எதுவும் செய்வதில்லை. கர்மவினைக்குத் தக்கபடி மாற்றத்தை ஏற்படுத்துவான். பலவாறான கர்மவினைகள்; எனவே, மாறுபட்ட கிரகங் களின் துணை அவனுக்குத் தேவை. பூமியில் விளையும் பயிர்கள் பலவிதம்; அதற்கு விதையின் தரம் காரணம். கண்ணுக்கு இலக்காகாத கர்மவினையின் தரத்தை வெளிக்கொண்டு வருபவன், சூரியன்!
ஞாயிற்றுக்கிழமை, சூரிய வழிபாட்டுக்கு உகந்த நாள். விண்வெளியில் சூரியனின் ஓடு பாதை, நடுநாயகமாக விளங்குகிறது. சந்திரன், புதன், சுக்கிரன், சூரியன், செவ்வாய், குரு, சனி... இப்படி முன்னும் பின்னுமாக இருக்கிற எல்லா கிரகங்களையும், தனது கிரணத்தால் செயல்பட வைத்து உலக இயக்கத்தைச் செம்மைப்படுத்துகிறான், சூரியன். 'ஸ¨ம் ஸ¨ர்யாயநம:’ என்று சொல்லி 16 உபசாரங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். சூரியன் உதிப்பதற்கு முன்பே அவனை வணங்குவது சிறப்பு. சூரிய நமஸ்காரம் 12 முறை செய்ய வேண்டும். மித்ர - ரவி - ஸ¨ர்ய - பானு - கக - பூஷ - ஹிரண்யகர்ப - மரீசி - ஆதித்ய - ஸவித்ரு - அர்க்க - பாஸ்கரேப்யோ நம: என்று சொல்லி வணங்கலாம். மித்ராயநம: ரவயநம: ஸ¨ர்யாயநம: பானவேநம: ககாயநம: பூஷ்ணெநம: ஹிரண்யகர்பாயநம: மரீசயேநம: ஆதித்யாயநம: ஸவித்ரேநம: அர்க்காயநம: பாஸ்கராயநம: என்று சொல்லிப் புஷ்பத்தைக் கைகளால் அள்ளி, அவனது திருவுருவத்துக்கு அளிக்க வேண்டும். 'பானோ பாஸ்கர மார்த்தாண்ட சண்ரச்மேதிவாகர...’ என்ற செய்யுளைச் சொல்லி வழிபட்டால், நினைத்தது நிறைவேறும்.

வெள்ளி, 1 ஜூலை, 2011

நவக்கிரகங்களில் தனியிடம் பெற்றவன் செவ்வாய்

நவக்கிரகங்களில் தனியிடம் பெற்றவன் செவ்வாய். இவனுக்கு 'குஜன்’ என்றும் பெயர் உண்டு. 'கு’ என்றால் பூமி; 'ஜன்’ என்றால் பிறந்தவன் எனப் பொருள்; பூமி புத்திரன் என்பார்கள். பூமி, வெப்பத்துடன் இணைந்திருக்கும். இவனிடமும் வெப்பம் உண்டு!

பூமியில் விதைக்கப்படும் விதையானது, நீரின் துணையோடு அதிலிருக்கும் வெப்பத்தால் முளைவிடும். படைப்புக்கு வெப்பத்தின் துணை அவசியம். பிரம்மன், ரஜோகுண சேர்க்கையில் படைப்பை நிகழ்த்துகிறார் என்கிறது புராணம். இந்த ரஜோகுணத்துடன் இணைந்தவன் செவ்வாய். அதன் நிறம் சிவப்பு. இதை வைத்து, செவ்வாயின் நிறமும் சிவப்பு என்கிறது சாஸ்திரம். 'அக்னிர்மூர்த்தா’ என்ற மந்திரத்தை அவனை அழைப்பதற்காக பயன்படுத்தச் சொல்கிறது வேதம். இதில் வரும் 'அக்னி’ எனும் சொல், வெப்பத்தைச் சுட்டிக் காட்டும். செவ்வாய்க்கு அதிதேவதை- பூமி; பிரத்யதி தேவதை- க்ஷேத்ரபாலன். க்ஷேத்ரம் என்றால் பூமி; பாலன் என்றால், காப்பாளன் எனப் பொருள். இப்படி, பூமியின் சம்பந்தம் செவ்வாய்க்கும் அதன் அதிதேவதைகளுக்கும் உண்டு.



சந்திரனுக்கும் செவ்வாய்க்கும் சந்திரசாரப்படி சம்பந்தம் இருக்கும் தறுவாயில், பெண்களில் மாதவிடாய் தோன்றும் என ஜோதிடம் சொல்கிறது. 'ரஜஸ்’ என்றால், மாதவிடாயின் வெளிப்பாடு எனச் சொல்லும் தர்மசாஸ்திரம், 'ரஜ:ப்ரவிருத்தி’ என்று மாதவிடாயைக் குறிப்பிடுகிறது. சரியான வேளையில் போதுமான ரத்தத்துடன்... அளவோடு 3 தினங்கள் ரத்தத்தை (ரஜஸ்யை) வெளியேறச் செய்யும் வேலையை செவ்வாயின் சந்திப்பு நிகழ்த்துகிறது. சந்திரன்- மனம்; செவ்வாய்- ரஜோகுணம். ரஜோ குணத்துடன் மனம் இணையும்போது, வெப்பம் மேலிட்டு ரத்தம் வெளியேறுகிறது என விளக்குகிறது ஆயுர்வேதம்.

அரக்கு வண்ணத்தில் வெளியேறும் அந்த ரத்தம், ரஜோகுணத்தின் அடையாளம். அதன்பிறகே, மனதில் எண்ணங்கள் உருவாகும். ரிதுவான பிறகு, மனதில் எண்ணங்கள் உதயமாகி, படிப்படியாக வளர்ந்து, எண்ணத்தை நிறைவேற்றிக்கொள்ள இணையைத் தேடும். ஆக, இணையோடு இணையவைத்து மகிழ்ச்சியை ஊட்டுபவன், செவ்வாய். உடலுறவை நிறைவு செய்யவும் செவ்வாயின் பங்கு வேண்டும்.

உறைந்த நெய்க்குடம் போன்றவள் பெண். கடுமையான வெப்பம் போன்றவன் ஆண். இவர்களது சந்திப்பில் இன்பம் பிறக்கும் என்பார்கள். நெருப்பின் தாக்கத்தில் நெய் உருகியோடும். அதேபோல், எண்ணங்கள் உருமாறி இன்ப வடிவத்தை அடையும் என்கிறது தர்மசாஸ்திரம் (கிருதகும்பஸமாநாரீ தப்தாங்கார ஸம:புமான்). சந்திரனைப் பெண்ணாகவும், செவ்வாயை ஆணாகவும் சொல்லும் ஜோதிடம். 'அங்கார’ என்றால் நெருப்புத் தணல். வேதம், நெருப்புத் தணலை அங்காரம் என்கிறது. அதிக வெப்பம் தணலில் இருக்கும்; ஜ்வாலையில் இருக்காது (தேப்யோங்காரேப்யோர் சிருதேதி). அந்த வெப்பத்தைச் சுட்டிக் காட்டி, செவ்வாயை அங்காரகன் என்றார்கள்.

தாம்பத்யத்தின் முழுத் திருப்திக்கு அவன் பங்கு வேண்டும். 'சும்மா இருக்கும் சிவனை செயல்பட வைத்தவள் பார்வதி’ என்பார் ஆதிசங்கரர் (சிவ: சக்த்யா.) சுறுசுறுப்பு, செயல்பாடு, சிந்தனையோட்டம், தன்மானம், வீரம், தைரியம், கண்டிப்பு, ஆர்வம், பிடிப்பு, பொறுமை, சகிப்புத்தன்மை ஆகிய அனைத்தும் செவ்வாயின் சேர்க்கையில் முழுமை பெற்று விளங்கும்.

அத்யுச்சம், உச்சம், மூலத்ரிகோணம், ஸ்வக்ஷேத்ரம், ஸீஹ்ருத்க்ஷேத்ரம் போன்ற பலம் பெற்ற செவ்வாய், வாழ்க்கையில் தடையில்லா மகிழ்ச்சியை அளிப் பான். அதிநீசம், நீசம், சத்ருக்ஷேத்ரம், மௌட்யம், அஸ்தமனம்... போன்ற பலமிழந்த நிலையில், இன்னல்களுக்கு இரையாக்கி சங்கடத்தைச் சந்திக்கவைப்பான் என ஜோதிடம் விளக்கும்.

விண்வெளியில் சூரியனுக்கும் குருவுக்கும் இடையில் செவ்வாயின் ஓடுபாதை அமைந்துள்ளது. சூரிய னுடன் இணைந்தால்... வெப்பம் மேலிட்டு, சாகஸ வேலைகளில் ஆராயாமல் ஈடுபடவைத்து துயரத்தில் ஆழ்த்துவான். ஆன்மகாரகன் சூரியனை, 'ஆக்னேய க்ரஹம்’ என்கிறது ஜோதிடம். செவ்வாயும் ஆக்னேய க்ரஹம். இரண்டும் வெப்பத்தை உமிழும். இவர்களது சேர்க்கையில், வெப்பம் உச்சக்கட்டத்தை அடைந்து விபரீத விளைவுகளை உருவாக்கும். சூரியக் கிரணங்களை உள்வாங்கும் பூமி, இரட்டிப்பாக வெப்பத்தை வெளியிடும் என்பது அனுபவத்தில் கண்ட உண்மை.

சந்திரனுடன் செவ்வாய் இணையும்போது, செவ்வாயின் வெப்பம் தணிந்து, மிதமான- இதமான சூழலை உருவாக்கி, மனதை ஆனந்தத் தில் ஆழ்த்துவான். இதை, 'சசிமங்கள யோகம்’ என்று பெருமையாகச் சொல்கிறது ஜோதிடம். சந்திரனில் இருக்கும் நீர், சூரியனிடமிருந்து பெற்ற வெப்பமான கிரணத்தை குளிரவைக்கிறது. தண்ணீருடன் இணைந்த சந்திரன், சூரியனிடம் இருந்து கிரணத்தைப் பெற்று படிப்படியாக வளர்கிறான் என்பது ஜோதிட விளக்கம் (ஸலிலமயேசசினிரவே: தீதிதய:...). வெப்பத்தைத் தணிக்க தண்ணீர் வேண்டும். சூரிய கிரணம், சந்திரனில் இருக்கும் தண்ணீரில் பட்டு வெளி வருவதால், நமக்கு குளிர்ச்சியை அளிக்கிறான் சந்திரன். அவனுக்கு சீதகிரணன் என்று பெயர் உண்டு. அதிக வெப்பத்தை அளவோடு நிறுத்த சந்திரனுக்கு தகுதி இருப்பதால், சசிமங்கள யோகம் அளவான வளமான வாழ்வைத் தரும் என வரையறுத்தது ஜோதிடம்.

வாழ்க்கைத் தரத்தை நிலைபெறச் செய்யவும் செவ்வாயின் பங்கு வேண்டும் என்கிறது ஜோதிடம். போர்வீரர்கள், வேட்டையாடுபவர்கள், மீன் பிடிப்பவர்கள், கசாப்புக் கடைக் காரர்கள், அறுவை சிகிச்சை செய்பவர்கள், அரசர்கள், நீதிபதிகள், வேள்வி செய்பவர்கள், மந்திரிகள், படைத்தலைவர்கள், தூக்குத் தண்டனையை நிறைவேற்றுபவர்கள் ஆகியோரை உருவாக்கி, அவர்களது பணியில் வெற்றிபெற வைப்பதில், செவ்வாய்க்கு தனிப் பங்கு உண்டு. இவர்கள், கருணை உள்ளம் படைத்தவர்களாகவே இருந்தாலும், அதை ஒதுக்கி வைத்துவிட்டு, இலக்கை நோக்கிச் செயல்படும் சுறுசுறுப்பை செவ்வாய் அளிப்பான்.

தேவஸேனாதிபதியை மகிழ வைத்தால், செவ்வாய் மனமிரங்கி அருள்வான் என்பார்கள். செவ்வாயின் இடையூறு விலக, முருகனை வழிபடுவர். அவர், தேவ ஸேனாதிபதியாக விளங்கி, மூவுலகையும் காப்பாற்றினார்.

புதனோடு இணைந்தால், சிந்தனையில் சுணக்கம் எழாமல் செய்து, உசுப்பி செயல்பட வைத்து, வெற்றி பெறவைப்பான். சிந்தனைத் திறன் குறையாமல் பாதுகாக்க வெப்பம் உதவும். ரஜோ குணம் சுறுசுறுப்பை ஏற்படுத்தி, சிந்தனையை வளரவிட்டு உதவி புரியும். செல்வாக்கும் செவ்வாயின் இணைப்பில் வளரும். அரசாணை நம்மை ஆட்கொண்டு பணிய வைக்கும் வல்லமையை நிலைக்கச் செய்ய, செவ்வாயின் பங்கு அவசியம். ஜமீன்தார்கள், பிரபுக்கள், மக்கள் தலைவர்கள் ஆகியோரது பெருமை நிலைத்திருக்க, செவ்வாயின் பங்கு வேண்டும்.

குருவோடு இணைந்தால் அறவழி சிந்தனைகள் வெளிப்பட, பொதுநலத் தொண்டில் இன்பம் காண்பவராக மாற்றிவிடுவான். இன்ப- துன்பங்களின் தரத்தை அறிந்து, பிறரது துன்பத்தை அழிப்பதில் முன்னின்று செயல்பட வைப்பான். பொருளில் இருக்கும் பற்றைத் துறக்கச் செய்து, வள்ளலாக மாற வைப்பான். குருவின் சேர்க்கை, அவனது ரஜோ குணத்தை முடக்கி, நல்ல வழியில்- அமைதியான முறையில் சுறுசுறுப்புடன் செயல்படவைக்கிறது.

சுக்கிரனுடன் இணைந்தால், உலக சுகத்தை சுவைத்து மகிழ வைப்பான். சுக்கிரன், பெண்மை பெற்ற கிரஹம் எனச் சொல்லும் ஜோதிடம், செவ்வாயை ஆண்மை பெற்றது என்கிறது. மாறுபட்ட இனத்தின் இணைப்பே உலக சுகம். 'சேர்க்கையில் விளைந்த செயற்கையான சுகம்- உலக சுகம்; சேர்க்கையைத் துறந்து, தனிமையில் கிடைக்கும் சுகம்- ஆன்ம சுகம்’ என்ற விளக்கமும் உண்டு. பொருளாதாரச் செழிப்பு, படாடோபமான வாழ்க்கை, அளவு கடந்த அலங்காரம், செல்வச் செருக்கு ஆகிய வற்றை சுக்கிரன் அளித்தாலும், செவ்வாயின் சேர்க்கையில் சிந்தனை திசைமாறி, வாழ்க்கை தடம் புரள, சோகத்தைச் சந்திக்க வைப்பான் அவன். வலுவான செவ்வாயுடன் வலுவான சுக்கிரன் இணையும் போது, புகழுடன் வாழ்வ துடன், இறந்த பிறகும் புகழுடன் திகழ்வான்.

சனியுடன் இணைந்தால், சனியிடமிருந்து வலுப்பெற்று, விபரீத விளைவுகளைச் சந்திக்க வைப்பான். சனி, சூரியனில் இருந்து வெளிவந்த கிரகம்; சூரியனின் புதல்வன் என்கிறது ஜோதிடம். சூரியன் ஆக்னேய கிரகம். சனியும் ஆக்னேய கிரகம். செவ்வாயும் ஆக்னேயம். மூவரது இயல்பும் ஒன்றாக இருக்கும். ஆனால் சனிக்கிரகம், வாயுவின் தன்மையைப் பெற்றிருக் கிறது. வாயுவும்... அதாவது காற்றும் நெருப்பும் இணைந்ததுபோல் ஆகிவிடும், சனி- செவ்வாய் சேர்க்கை. இதை, 'அக்னிமாருத யோகம்’ எனக்

குறிப்பிடுகிறது ஜோதிடம். நெருப்பு கொழுந்து விட்டு எரியும்போது, காற்று அதற்கு உதவி புரிந்து, நெருப்பை மேலும் மேலும் வளரச் செய்யும். அதேபோல் சனியின் சேர்க்கை, செவ்வாய்க்கு

வலுவூட்டி, ரஜோகுணத்தைப் பெருக்கி, சிந்தனை செய்யவிடாமல் சடுதியில் செயல்பட வைத்து, துயரத்தை சந்திக்கவைக்கும். முற்றிலும் தீமையை விளைவிப்பதால், இதைக் கெடுதலான யோகமாகக் குறிப்பிடுகிறது ஜோதிடம்.

சனி, நம்புஸககிரஹம்; ஆண்மைக் குறைவால் செவ்வாய்க்கு அடிபணிந்து விடுகிறது. சனியை துக்ககாரகன் என்று குறிப்பிடும் ஜோதிடம். பிற கிரகங்களின் தாக்கத்தை சந்திக்காத வலுப்பெற்ற செவ்வாய், சனியின் சந்திப்பில் முழு பலத்துடன் செயல்படுவதால், அந்த ரஜோ குணம் எல்லையைத் தாண்டிக் கெடுதலைச் சந்திக்க வைக்கிறது. அதிகமானால் அமுதமும் விஷம் என்பது இங்கு பொருள் படைத்ததாகவே தென்படுகிறது.

ராகுவுடன் இணைந்தால்... இருளில் மூழ்கிவிடுவதால், செயல்பாடு சிறக்காமலோ, அரைகுறையாகவோ முடிவடைய வைப்பான். ராகுவை க்ரூர கிரகம் என்பர். கிரஹணத்தின்போது சந்திர- சூரியரைத் துன்புறுத்துபவன். அது அவனது இயல்பு. அவனது சேர்க்கையில்... சுறுசுறுப்பு துன்புறுத் தலுடன் இணையும்போது, துயரத்துக்கே வழிவகுப்பான்.

செவ்வாய், கேதுவுடன் சேர்ந்தால், நன்மையை விட தீமையைச் சந்திக்க வைப்பான். கேதுவும் ஆக்னேய கிரகம். 'சிகி’ என்று அவனுக்குப் பெயர் உண்டு. சிகி என்றால் நெருப்பு என்று பொருள். சிகி, நிழல் கிரகம். அதனுடன் இணைந்த செவ்வாய், தனது ரஜோ குணத்தை முற்றிலும் இழந்து, மனத்தெளிவை ஏற்படுத்தி வைப்பான். வலுவுடன் இணைந்த செவ்வாய்- கேதுவின் சேர்க்கையில், ஆசைகளை அழிக்கும் விஷயத்தில் சுறுசுறுப்பு பெற்று, கர்மவினை முழுவதையும் வெப்பத்தால் அழியவைத்து, அறிவாளியாக மாற வைப்பான். கேதுவை மோக்ஷகாரகன் என்கிறது ஜோதிடம். மோக்ஷம் என்றால் துயரத்திலிருந்து விடுதலை என்று பொருள்.

'அறிவு என்கிற நெருப்பு, எல்லா வினை களையும் அழித்து சாம்பலாக்கி விடும்’ என்று ஸ்ரீகண்ணன் சொல்வார். உலக சுகத்தில் சுறுசுறுப்பு இணையும்போது, இல் வாழ்க்கையில் திளைப்பான். உலக சுகத்தில் பற்றற்று செயல்படும்போது, அறிவைப் பெற முயற்சிகள் திருப்பிவிடப்பட்டு, மோக்ஷத்தை எட்டவைப்பான்.

ஆக, படைப்புக்கும் செவ்வாய் தேவை. இன்பத்தை சுவைக்கவும் அவன் தேவை. இன்பத்தைத் துறந்து வீடுபேறு பெறவும் அவன் தேவை. அவனின்றி அணுவும் அசையாது. அப்படி அசைவதற்கு ரஜோகுணம் தேவை. அது அவனிடம் இருக்கிறது.

செவ்வாய்க்கிழமையில் அவனை வழிபடவேண்டும். 'அம் அங்காரகாய நம:’ என்று சொல்லி, 16 உபசாரங்களைச் செய்ய வேண்டும். பூமி மாதா, அவனது அதிதேவதை. மந்திரம் தெரிந்தவர்கள், பூசூக்தம் சொல்லி வழிபட லாம். தெரியாதவர்கள், 'பிருதிவ்யை நம:’ என்று சொல்லி வழிபடலாம்.

காலையில் குளிர்ந்த நீரில் நீராடி உடையணிந்து, நெற்றித் திலகம் இட்டு, செவ்வாயின் திருவுருவத்தை வைத்து, 'அம் அங்காரகாய நம:’ என்று இரண்டு கைகளாலும் புஷ்பத்தை அள்ளிப்போட்டு வணங்குங்கள்.

ஆரக்தமால்ய வஸனம்
பாரத்வாஜம் சதுர்புஜம்
ஸ்கந்தாதிதைவதம் பௌமம்
க்ஷிதிப்ரத்யதி தைவதம்

- என்ற செய்யு ளைச் சொல்லி அடிபணிய வேண்டும். சிரமப் படாமல் எளிய முறையில் செயல்பட்டு, முழுமையைப் பெற வேண்டும் என்ற சிந்தனை கொண்டவர்கள் தற்காலத்தில் அதிகம். அதைப் பெறமுடியாமல் தவிப்பர்களும் உண்டு. சிரமத்தை ஏற்று, அதைச் சுமந்து சுணக்க முறாமல், சுறுசுறுப்புடன் இயங்க செவ்வாயின் திருவருள் துணைசெய்யும்.

-

வெள்ளி, 17 ஜூன், 2011

குரு தரிசனம்... கோடி புண்ணியம்!

சந்திரன், புதன், சுக்கிரன், சூரியன், செவ்வாய், குரு, சனி- இந்த ஏழு கிரகங்களும், வாயு மண்டலத்தைக் கடந்திருக்கிற அண்ட வெளியில், பிரவஹம் எனும் சிறப்புக் காற்றினால், ஒன்றுக்கு மேல் அகண்ட இடைவெளியுடன் இணைந்த தனித்தனி வழித்தடங்களில் சுற்றி வருகின்றன என்கிறது சூர்யசித்தாந்தம். காலம் என்பது அருவமானது; அதற்கு உருவம் அளிப்பவர்களே இந்தக் கிரகங்கள்தான்! அதுமட்டுமா? கிழமைகளின் வரிசைகளை வரையறுத்ததும் இவர்கள்தான்.



இன்று ஞாயிற்றுக்கிழமை எனில், சூரியன் தோன்றும் வேளையில்... அன்றைய தினம் சூரிய ஹோரை. அன்று முழுவதும் ஞாயிற்றுக்கிழமை. கிரக வரிசையில், சூரியனில் இருந்து 4-வதாக இருப்பது சந்திரன். ஆகவே,

மறுநாள் திங்கட்கிழமை. சந்திரனில் இருந்து 4-வது, செவ்வாய்; எனவே, மறுநாள் செவ்வாய்க்கிழமை என விளக்கம் அளிக்கிறது சூர்ய சித்தாந்தம். அவர் களின் சுழற்சி, உலக இயக்கத்துக்கு உதவுவதால் அவர்கள் வணக்கத்துக்கு உரியவர்களாக மதிக்கப் படுகின்றனர். பருவகால மாற்றங்களுக்குக் காரணமாக இருந்து கொண்டே, ஜீவராசிகளின் சிந்தனை மற்றும் செயல்களுக்கும் காரணமாகின்றனர் நவக்கிரகங்கள். இவர்களின் தாக்கம் தொடாத இடமே உலகில் இல்லை. உடலுடன் நிற்காமல், உள்ளத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தி, அதன் மூலம் சிந்தனையிலும் மாற்றமுறச் செய்து, செயல்பாட்டில் ஏற்ற- இறக்கத்தையும் நிகழ்த்துகின்றன என்று, கிரகங்கள் குறித்து ஜோதிடங்கள் விவரிக்கின்றன.

12 ராசிகளுடன் இணைந்த இந்த ஏழு கிரகங்களும், கால புருஷனின் உடற்கூறாகக் காட்சி தருகின்றன. ஒளிப் பிழம்பான சூரியன்- கால புருஷனின் ஆன்மா; சந்திரன்- அவனுடைய மனம்; குரு, அவனுடைய பேரறிவு. சூரிய னிடம் இருந்து சந்திரன் உருப்பெற்றான் (ஸலிலமயேச சினிரவேர்தீதிதய;). இவர்களுடன் அறிவு இணையும் போது, சராசரத்தின் இயக்கம் சரியான பாதையில் செல்லும். அந்த அறிவுதான், குரு! அவனுக்கு அறிஞர் என்று பெயர். அதனால்தான், கிரகங்களில் குருவின் பங்கு சிறப்பு வாய்ந்ததாகப் போற்றப்படுகிறது.

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகள். கால புருஷனின் தேகத்தில் தலை, மேஷம்; முகம், ரிஷபம்; கழுத்து, மிதுனம்... எனத் துவங்கி கால்கள், மீனம் என முழுமையுறும். இந்த ராசிகளில் பற்றிக்கொண்டிருக்கும் கிரகங்கள், அந்தந்த உடற்கூறுகளுடன் இணைந்து, மொத்த உடலையும் பராமரிக்கின்றன. பஞ்சபூதங்களின் கலவையில் உருப்பெற்றது இந்த உலகம். பூதங்க ளில், ஆகாயமும் அடங்கும்; அதில் கிரகங்களும் இணைந்துள்ளன. ஐம்பெரும் பூதாம்சங்களின் கலவையில் உருப்பெற்றது இந்த மனித உடல் என் கிறது ஆயுர்வேதம் (இதிபூத மயோ தேஹ:).

நம் உடலிலும் ஆகாயத்தின் பங்கு உண்டு; அதில், கிரகங்களின் சாந்நித்தியமும் கலந்திருக்கும். வெளியிலுள்ள ஆகாயம், உடலுக்குள்ளும் பரவியிருக்கிறது எனத் தெரிவிக்கிறது உபநிடதம்.

வெளியில் தென்படும் கிரகங்களின் சுழற்சியில் ஏற்பட்ட விளைவு, உடலுக் குள் உறைந்துள்ள கிரகாம்சத்திலும் பரவியிருக்கும்.

கிரஹங்களில், குருவை 'பிரகஸ்பதி’ என்பர். அது, வேதம் அளித்த திருநாமம். சூட்சுமமான அறிவுக்கு, ஸ்தூல வடிவம் கொடுத்து, பிரஹஸ்பதி எனப் பெயரும் வைத்திருக்கிறோம். கிரக வரிசையில் செவ்வாய்க்கும் சனிக்கும் நடுவில் இருப்பார், குரு. அண்டவெளியில் அவரின் ஓடு பாதை, இந்த இரண்டுபேருக்கு இடையே அமைந்திருக்கும்.

ரஜோ குணம், சுறுசுறுப்புடன் நிற்காமல், அகங்காரம், இறுமாப்பு, அலட்சியம் ஆகியவற்றையும் ஏற்படுத்தும். ஏளனம் மற்றும் சூளுரைத்தல் ஆகியவற்றையும் அது தரவல்லது! ஆராயாமல் திடீரென முடிவு எடுத்தல், பொறுமை இல்லாமை ஆகியவற்றையும் தந்து அலைக்கழிக்கும்! செவ்வாய் கிரகத்தின் இயல்பும் அதுதான்! 7-ல் செவ்வாய் அவர்களின் ரஜோ குணத்தைத் தட்டி எழுப்பி, கருத்து மாறுபாடுகளைக் கொடுத்து, தாம்பத்தியத்தில் கசப்பையும் ஏற்படுத்துவான் எனும் நோக்கில், ஜாதகத்தில் செவ்வாய் தோஷத் தைத் தவிர்க்கின்றனர்.

சோம்பல், மெத்தனம், உறக்கம், மயக்கம், அறியாமை, உள்ளதை உள்ளபடி அறிகின்ற திறமையின்மை ஆகியன தமோ குணத்தின் வெளிப்பாடு; இது, சனியின் இயல்பு.

ஸத்வ குணம் பொருந்தியவன் குரு. தன் இரண்டு பக்கங்களிலும் உள்ள செவ்வாயையும் சனியையும் கட்டுப்படுத்தி, இருவரையும் ஸத்வ குணத்துடன் இணைத்து உலக இயக்கத்தின் பயனை உணர வைப்பவர், பிரஹஸ்பதி! ராசிச் சக்கரத்தில் 9 மற்றும் 12-ஆம் வீடுகள் குருவின் ஆதிக்கத்தில் இருக்கும். தனுர் மற்றும் மீன ராசிகளுக்கு அதிபதி இவர்தான்! மீனத்தில் இருக்கும் குரு, தனக்குப் பிந்தைய ராசியில், அதாவது கும்பத்தில் சனியையும், முன் ராசியான மேஷத்தில் செவ்வாயையும் வைத்திருக்கிறார். தனுர் ராசியில் இருக்கும் குரு, பின் ராசியில் அதாவது விருச்சிகத்தில் செவ்வாயையும் முன் ராசியில் அதாவது மகரத்தில் சனியையும் வைத்துக் கொண்டிருக்கிறார். அண்டவெளி வரிசை யில் அவர், இருவருக்கும் இடையில் வழித்தடத்தை வைத்துக் கொண்டிருக் கிறார். இங்கேயும் ராசிச் சக்கரத்தில், இருவருக்கும் இடையே தனது இருப் பிடத்தை அமைத்துக் கொண்டிருக் கிறார். குருவானவர், சிஷ்யனை அருகில் அமர்த்திக்கொண்டு, அவனது அறியாமையை அகற்றுவது போல், இருவரது செயல்பாட்டையும் தூய்மைப் படுத்தி அவர்களையும் அரவணைத்தபடி செயல்படுகிறார் அவர்!

நமது அத்தனை இன்னல்களுக்கும் அடிப்படைக் காரணம், நம்மில் உறங்கிக்கிடக்கிற ரஜோ மற்றும் தமோ குணங்கள்தான்! அவற்றைக் கட்டுக்குள் வைத்திருக்க, ஸத்வ குணம் வலுப்பெற்றிருக்க வேண்டும். காரத்தையும் கசப்பையும் கட்டுப் படுத்த, இனிப்பும் உப்பும் உதவும். அதேபோல் இனிய வாழ்க்கைக்கு மூன்று குணங்களும் தேவை. வாழ்க்கையின் திசையையே தடம் புரளச் செய்யும் ரஜோ மற்றும் தமோ குணங்களைக் கட்டுப்படுத்த, ஸத்வ குணம் அவசியம். அதனைத் தந்து அருள்பவர், குரு. வாழ்க்கை யுடன் என்றைக்கும் நம்முள் இணைந்திருப்பவரும் கூட! எதிர்பாராத இன்னல்களின்போது, அந்தச் சிக்கல்களில் இருந்து நம்மை விடுவிப்பவர், ஸத்வ குணத்தின் குன்றெனத் திகழும் குரு பகவான்!

பிரம்மாவின் முதல் படைப்பு, தண்ணீர். உலகை ஆட்கொள்வது பிரளயம்; அதாவது தண்ணீர். இரண்டையும் சுட்டிக்காட்டும் ஜலமயமான மீன ராசியில் இருந்தபடி, முடிவுக்கும் ஆரம்பத்துக்கும் இணைப்பாக வீற்றிருக்கிறார் அவர்! ஸத்வ குணத்துடன் சும்மா இருந்த குரு, தனக்கு அருகில் உள்ள மேஷ ராசியில் அமர்ந்த ரஜோ குண செவ்வாயின் துணையுடன் படைப்பைத் துவங்க உதவி புரிகிறார். அதேபோல், உலகை ஆட்கொள்ள, துயரத்துக்குக் காரணமான தமோ குண சனியின் உதவியால், அனைத்தையும் அழித்து பிரளயத்துக்கு வழி வகுக்கிறார். நீரில் இருந்து ஜீவராசிகளின் தோற்றத்தை உணர்த்தி, பரிணாம வாதத்தை வெளியிட்ட ஆய்வாளர்களின் முடிவை, குருவின் மீன ராசியின் இருக்கை, சொல்லாமல் சொல்கிறது!

அதிர்ஷ்டம், புண்ணியம், பெருமை, புகழ், சந்நியாசம், அதன் மூலம் கிடைக்கிற விடுதலை, அறிவு ஆகியவற்றை உள்ளடக்கிய ராசிச் சக்கரத்தின் 9-ஆம் இடமான தனுர் ராசியிலும் அமர்ந்திருக்கிறார் குரு. சுத்தமான ஸத்வ குணத்துக்கு அடையாளமான குணங்களைப் பறைசாற்றும் அந்த ராசி, அவரது சாந்நித்தியத்தில் வளர்ச்சி பெற்று, நல்ல குடிமகனாக மாற்றும் திறனைப் பெற்றிருக்கிறது. லோகாயத வாழ்வைச் செம்மைப்படுத்தவும், ஆன்மிக வாழ்வின் எல்லையை அடையவும் குருவருள் தேவை என்பதை 9 மற்றும் 12-ஆம் வீடுகளில் அமர்ந்து வெளிப்படுத்துவதை உணரவேண்டும். இகபர சுகத்தை அள்ளித் தரும் குரு பகவானைப் போற்றி வணங்குதலே சிறப்பு!

சந்திரனுடன் குரு இணையும்போது, மனமானது அறிவுடன் இணைகிறது. அறிவின் உதவியில், செயலானது சிறப்புற்று, செல்வத்தில் திளைக்கச் செய்கிறது. இதனால் இது, கஜகேஸரி யோகம் எனும் பெருமையைப் பெறுகிறது. சூரியனுடன் குரு இணையும் வேளையில், ஆன்மாவுடன் அறிவு இணைகிறது; அவன், ஆன்மிக அறிவைப் பெற்று வீடுபேறு எனும் நிலையை அடைகிறான்.

சீடரான சூரியன் வீட்டுக்கு அதாவது சிம்ம ராசிக்கு குரு விஜயம் செய்யும்போது, ஆன்மாவும் அறிவும் சந்திக்கின்றன. அப்போது, சிற்றின்பமான திருமணம் முதலானவற்றைத் தவிர்த்து, குருவுக்குப் பெருமையளிப்பார்கள்! மாமாங்க வருடத்தில் திருமணத்தைத் தவிர்ப்பது, அதன் வெளிப்பாடு. செவ்வாய் மற்றும் சனியுடன் இணையும்போது, இரண்டு குணங்களின் தாக்கங்களைக் கட்டுப் படுத்தி, ரஜோ குணத்தையும் தமோ குணத்தையும் வாழ்வின் உயர்வுக்குச் சாதகமாக மாற்றி அமைப்பார் குரு பகவான். அவரின் பார்வை பட்டாலே, இரண்டு கிரகங்களும் தனது இயல்பை மாற்றிக்கொண்டுவிடும்.

7-ல் இருக்கும் செவ்வாயை, குரு லக்னத்தில் இருந்து பார்க்கும்போது, இடையூறைத் தருகிற இயல்பை மாற்றி, செவ்வாய்க்கு ஒத்துழைக்கும் தன்மையை வரவழைக்கிறார் குரு. அப்போது சம்பந்தப்பட்டவர்களின் தாம்பத்தியத்தில் இன்னல் கள் ஏதும் நேராது. குரு பார்வைபட்ட வீடுகளும் கிரகங்களும் தங்களது விபரீத எண்ணங்களை அடக்கிக்கொள்ளும்; நல்ல எண்ணங்களை வாரி வழங்கும்.

ரஜோ குணமும் தமோ குணமும் சேரும்போது, ஒன்று மற்றொன்றை வளர்த்து, பேரிழப்பு வரக் காரணமாக அமையும். சனியும் செவ்வாயும் இணைந்தால், இரண்டு குணங்களும் பெருகும். அதற்கு அக்னி மாருத யோகம் என்ற பெயர் உண்டு. நெருப்பு காற்றுடன் இணைகிறபோது, அணைக்க முடியாமல் திணறுவோம், இல்லையா?! அதேபோல், வாழ்வில் பிரச்னைகளின் இணைப்பால், நாமும் படாதபாடுபடுவோம். இந்த இருவரையும் குரு பார்த்துவிட்டால், அக்னி மாருத யோகம் செயலற்றுவிடும். குருவின் பார்வை, பிரச்னைகள் பலவற்றையும் அழித்துவிடும். குருவின் சேர்க்கை அல்லது பார்வை, கிரகங்களுக்கு இருக்கும் நல்லது- கெட்டது என்கிற இரு தன்மைகளில், கெட்டதை அழித்து, நல்லதைப் பெருக்கி உதவும்.

இத்தனை இருந்தும் ஒரு விதிவிலக்கும் உண்டு. ராகுவோடு சேர்ந்த குரு செயல்பட இயலாமல் தவிப்பார். ராகு இருள் வடிவு; அறியாமை! அறியாமையானது அறிவை ஆட்கொண்டு விடுகிறது. செயல்பாடு முடக்கப்படுகிறது. சூரிய னால் உருவாக்கப்பட்ட மேகம், சிலநேரம் சூரிய னின் கிரணத்தைப் பரவவிடாமல் தடுப்பதுண்டு.

மற்ற சுப கிரகங்கள் பாப கிரகத்துடன் இணைந் தால், பாப கிரகத்தின் தன்மை சுப கிரகங்களுக்கும் வந்துவிடும். ஆனால், குருவோடு சேர்ந்த பாப கிரகங்கள், தனது இயல்பை மாற்றி, குருவின் இயல்பை ஏற்றுக்கொண்டு விடும். இப்படியரு பெருமை குருவுக்கு மட்டுமே உண்டு. இந்தப் பெருமை, பரம்பொருளான- உலக குருவான தட்சிணாமூர்த்தியிடமிருந்து கை மாறியது. பரம்பொருள் பேரறிவு. அறிவுக்கு ஈசனை நாடு என்கிறது சாஸ்திரம் (ஞானம் மஹேச்வராதி ச்சேத்). 'சூரியனுக்கு ஒளியை வழங்கியவர் ஒளி மயமான பரம்பொருள்’ என்கிறது உபநிடதம் (தஸ்ய பாஸா ஸர்வமிதம் விபாதி). அதுபோல, உலக குருவான ஸ்ரீதட்சிணாமூர்த்தியின் அறிவுத் திறன், நவக்கிரக குருவுக்குள் ஊடுருவியது.

குருவை என்றும் வணங்கவேண்டும். ஒட்டு மொத்தமான மகிழ்ச்சிக்கு அது உதவும். வேதம் ஓதுபவர்களும் 'ஸ்ரீகுருப்யோ நம:’ என்று குரு வணக்கத்தோடு செயல்படுவார்கள். 'கும் குருப்யோ நம:’ என்று சொன்னால், அது மந்திரமாக மாறிவிடும். அதைச் சொல்லி 16 உபசாரங்களை செயல்படுத்தவேண்டும்.

குருர் பிரம்மா, குருர் விஷ்ணு: குருர் தேவோ மஹேச்வர: குரு: ஸாஷாத் பரம்ப்ரம்ம தஸ்மை ஸ்ரீகுருவே நம: என்று செய்யுளைச் சொல்லி வணங்குங்கள். நன்மை நம்மைத் தேடி வரும்.

சனைச்சரன்

ஒன்பது கிரகங்களில், சனி பகவானும் ஒருவர். சனைச்சரன் என்றும், மந்தன் என்றும் குறிப்பிடுவர். 'சனை’ என்றால் மெள்ள, அதாவது மெதுவாக என்று அர்த்தம். ஒரு ராசியில் தனது பயணத்தைச் சுமார் இரண்டரை வருடங்கள் எடுத்துக்கொள்கிறார் சனி பகவான். மற்ற கிரகங்களைவிட இவருடைய பயணம் மெதுவாக இருப்பதால், அந்தப் பெயரே பொருந்துகிறது இவருக்கு!

விண்வெளியில் அவர் பயணிக்கும் பாதை, எல்லா கிரகங்களையும் தாண்டி இருக்கும். விண்வெளியில் வெகு தொலைவில் இருப்பவர், இவர்! சனி பகவானைக் கடந்து இருப்பது நட்சத்திர மண்டலம். அவரிடமிருந்துதான் கிழமைகளின் தோற்றமும் வரிசைகளும் உருவாயின.

ராசி மண்டலத்தை ஒருமுறை வலம் வருவதற்கு, சனி பகவானுக்கு 30 வருடங்கள் தேவை. அதாவது, ஒருவரது வாழ்நாளில், சனி பகவான் மூன்று முறை வலம் வருகிறார். முதல் 30 வருடத்துக்குள் ஒருமுறை, 60 வருடத்துக்குள் இரண்டாவது முறை, 90 வருடத்துக்குள் மூன்றாவது முறை என சனி பகவானின் வலம் வருதல் நிகழ்கிறது. முதல் வலத்தை மங்கும் சனி; அடுத்ததை பொங்கும் சனி; மூன்றாவதை போக்கு சனி என்பார்கள்!



இப்படி மூன்றாகப் பிரித்த ஆயுள் காலத்தில், முதல் பிரிவு கௌமாரம் எனப்படும். அதாவது, அனைத்தையும் கற்கும் சிறுவயது என்பர். அடுத்து, யௌவனம்; அதாவது இளமைப் பருவம். எண்ணங்களின் வசத்துக்கு உட்பட்டு, அலசி ஆராயும் திறனுடன், நல்லது - கெட்டதை அறிந்து செயல்பட்டு வாழும் காலம் அது. துன்பங்களைத் தாங்கி, அதனை அலட்சியப்படுத்தி, மனோபலமும் சிந்தனைத் தெளிவும் கொண்டு செழிப்புடன் விளங்குகிற பருவம் இது! மூன்றாவது, முதுமை. தேக ஆரோக்கியமும் மனோபலமும் குறைகிற இறுதிப்பகுதி. கௌமாரம், யௌவனம், வார்த்தகம் என வாழ்வின் மூன்று பிரிவுகளை விவரிக்கிறது ஆயுர்வேதம்.

சிறுவயதில் கல்வியைக் கிரகிக்கும் தருணத்தில், சகல விஷயங் களையும் உள்வாங்கிப் பதிய வைக்கும்போது, சனி பகவானின் தாக்கம் மங்கலாகவே இருக்கும். மனதில் பதிந்த எண்ணங்கள், முழு வளர்ச்சியை எட்டாத நிலையில், சனியின் தாக்கம் முடங்கிவிடும். ஆகவே, சனியின் பாதிப்பு மங்கியது என்பர்.

இளமையில் வளர்ச்சியுற்று, எண்ணம் பெருகி, கிரகிப்பதிலும் வளர்ந்து, சனி பகவானின் தாக்கம் கட்டுக்கடங்காத ஆசைகளை அவனுக்குள் வளர்ந்தோங்கச் செய்து, பொங்கச் செய்கிறது. ஆகவே, பொங்கு சனி என்கின்றனர். இன்ப - துன்பம் நிறைந்த வாழ்வில், துன்பத்தை ஏற்காமல், இன்பத்தை மட்டுமே ஏற்று மனதுள் மகிழ்ச்சியைப் பொங்கச் செய்கிறார் சனி பகவான். இளமையில் கற்ற கல்வியுடன் விவேகமும், பகுத்தறிகிற பக்குவமும் கலந்திருக்க, சனி பகவானின் தாக்கத்தை, விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் திசை திருப்ப முடியும். ஆகவே பொங்கு சனியாகச் செயல்படுகிறார் சனீஸ்வரர்.

முதுமையில், சோர்வைச் சந்தித்த உடலும் உள்ளமும் கொண்டிருக்க, சனியின் தாக்கத்தை எதிர்கொள்ள முடியாமல் போகிறது. சனியின் விருப்பப்படி தன்னை இணைத்துக்கொள்ள நிர்பந்தம் ஏற்படுவதால், வாழ்க்கையின் எல்லையை எட்டவைக்க அவன் செயல்பாடு உதவும். ஆகவே, அவனது வேலையைச் சுட்டிக்காட்டி, போக்கு சனி என்றனர். ஆக, முதற்பகுதி வளரும் பருவம்; 2-ஆம் பகுதி, வளர்ந்து செழிப்புற்று, இன்பத்தை அனுபவிக்கிற பருவம்; இறுதியில், உடலுறுப்புகள் தகுதியை இழக்கும் பருவம். இப்படி உடலின் மாறுபட்ட பருவங்களுக்குத் தக்கபடி, சனி பகவானின் செயல்பாடு இருப்பதை, ஜோதிடம் சுட்டிக்காட்டுகிறது.

ராசி மண்டலத்தில் வலம் வரும் தருணத்தில், சந்திரன் இருக்கிற ராசியில் இருந்து பன்னிரண்டிலும், சந்திரன் இருக்கிற ராசியிலும், அடுத்து சந்திரனில் இருந்து 2-வது ராசியிலும் இரண்டரை வருடங்கள் தங்கியிருந்து, பயணிப்பார் சனி பகவான். ஆக, மூன்று ராசியிலும் இருந்த காலத்தைக் கூட்டினால் மொத்தம் ஏழரை வருடங்கள் வரும். இதை, ஏழரை நாட்டுச் சனி என்பார்கள். அதாவது ஏழரை ஆண்டுகளை நாடிய சனி எனப் பொருள்.

பிறக்கும் வேளையில் சந்திரன் இருக்கும் ராசி, ஒருவரது நட்சத்திரத்தைச் சொல்லும். அத்துடன், அவனது மனத்தையும் சுட்டிக்காட்டும். சனியுடன் மனம் நெருங்கிவரும் வேளை, 12-ஆம் ராசி; நெருக்கம் வலுப்பெற்றிருப்பது, சந்திரன் இருக்கும் ராசி; அந்த நெருக்கம் தளர்வது- 2-வது ராசி. இந்த நெருக்கத்தின் தன்மையைக்கொண்டே, மங்கும் சனி, பொங்கும் சனி, போக்குச் சனி என்றும் சொல்லலாம். 12-ல் உள்ளபோது மங்க வைப்பார்; சந்திரன் இருக்கும் ராசியில் இருக்கும்போது பொங்க வைப்பார். இரண்டில் இருக்கும்போது, போக வைப்பார்.

மனதோடு இணைந்த எண்ணங்கள், அதன் தாக்கம் நெருங்கும்போது, இன்பமோ துன்பமோ முழுமையாக வரும். விலகியிருக்கும் வேளையில், தாக்கம் செயலற்றுப் போகும். அதாவது, பன்னிரண்டிலும் இரண்டிலும்... நெருக்கம், மனத் துடன் (சந்திரனுடன்) குறைந் திருப்பதால் பாதிப்பானது, அனுபவத்துக்கு வராமலே போகலாம். அந்த ஏழரை வருட காலத்தில், அவனது தசாபுக்தி

அந்தரங்கள் வலுவாகவும் நன்மையை வாரி வழங்கு வதாகவும் இருந்தால், சனியின் தாக்கம் செயலிழந்துவிடும். தனக்கு இருக்கும் மூன்று இயல்புகளில் 'பொங்கும்’ இயல்பு வெளிப்பட்டு, தசாபுக்தி அந்தரங்களின் தரத்தைப் பொங்க வைத்து மகிழ்ச்சியைப் பன்மடங்காக்குவார். மாறாக தசாபுக்தி அந்தரங்கள் துயரத்தில் ஆழ்த்தும் நிலையில் இருந்தால், தரத்தையட்டி மங்கவைப்பதோ அல்லது அதன் உச்சத்தை எட்டவைப்பதோ சனியின் வேலையாக மாறிவிடும்.

தசாபுக்தி அந்தரங்களைப் புறக்கணித்து, தன்னிச்சையாக செயல்படும் தகுதி சந்திர சாரப்படி வளையவருகிற ஏழரை நாட்டுச் சனிக்கு இல்லை. சந்திர சாரப்படி தென்படுகிற

கிரகம், தசாபுக்தி அந்தரங்களின் பலத்தை நிறைவேற்றவே ஒத்துழைக்கும். பிறக்கும்போது இணைந்த நட்சத்திரம், அவனது ஆயுள் முடியும் வரை சந்திக்கவேண்டிய தசாபுக்தி அந்தரங்கனை வரிசையாகப் பட்டியலிட்டுத் தந்துவிடும்; கர்மவினைக்கு உகந்தபடி, இன்ப - துன்பங்களைச் சந்திக்கும் காலத்தையும் வரையறுத்துவிடும். சந்திரசாரப்படி மாறி வரும் அந்தந்த வேளையில், அந்தந்த ராசியில் தென்படும் கிரகங்களின் பலன்கள், தசாபுக்தி அந்தர பலன்களை முடக்கிவைக்க இயலாது. நொடிக்கு நொடி, மனித சிந்தனையில் மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டே இருப்பதால், மனமாற்றத்துடன் இணைந்த கிரகங்கள், நிரந்தரப் பலனை அளிக்க இயலாது என்பதே உண்மை. நிச்சயமான பலனை அளிக்கவல்லது தசாபுக்தி அந்தரங்கள். தசையினால் திடமான பலத்தை அறியவேண்டும் என்கிறது ஜோதிடம் (விசிந்தயேத் த்ருடம்...). அஷ்டகவர்த்தை முன் வைத்து அதிருட பலத்தை அறியவேண்டும். நிச்சயமல்லாத, அதாவது சந்தர்ப்பம் இருந்தால் தென்படும் பலன்களை அறியவேண்டும் என்கிறது அது. யோகங்களால் இரண்டு வித பலன்களும் ஏற்படலாம். யோக பலம் செயல்பட்டுத்தான் தீரவேண்டும் என்ற கட்டாயமில்லை என்றும் விளக்கம் தருகிறது ஜோதிடம்.

சூரியனுடனும் (ஆன்மா), சந்திரனுடனும் (மனம்) இணைந்திருப்பவர் சனி பகவான். சூரியனின் 'சாரம்’ சனி; சூரியனிடமிருந்து வெளிவந்தவர்; சூரியனின் புதல்வன் என்றும் ஜோதிடம் தெரிவிக்கிறது. அப்பாவின் சாரம், பிள்ளையாக உருவெடுத்தது என்கிறது வேதம். அதேபோல், மனதுடன் தொடர்புகொண்டவர் சனி. மனதுள் உறைந்திருக்கும் சிந்தனையைத் தட்டி எழுப்பிச் செயல்பட வைக்கிற

தமோ குணம் அவரிடம் உண்டு. சூரியனில் (ஆன்மா) இருந்து உருப்பெற்றது சந்திரன் (மனம்). ஆன்மா ஒன்று மனமும் ஒன்று. ஆகவே, 12 ராசிகளில் இருவருக்கும் ஒரு வீடு மட்டுமே உண்டு. புலன்கள் இரண்டாக இருப்பதால், மற்ற ஐந்து கிரகங்களுக்கு இரண்டு வீடுகள் இருக்கும். ஆன்மா மற்றும் மனத்துடன் புலன்களுக்குத் தொடர்பு உண்டு. ஆதலால் ராசிச் சக்கரத்தில், சிம்மத்தில் உள்ள சூரியனுக்கு, மற்ற கிரகங்களின் தொடர்பு வரிசையாக இருக்கும். அதேபோல், கடகத்தில் உள்ள சந்திரனுக்கு, மற்ற கிரகங்களின் தொடர்பு வரிசையாக இருக்கும். சூரியனுக்கு சிம்மராசி. அதற்கு அடுத்த ராசியில், புதன். அதையடுத்து, சுக்கிரன், செவ்வாய், குரு, சனி என்று இருப்பார்கள். சந்திரனுக்குப் பின் ராசியில், மிதுனத்தில் புதன்; அடுத்து சுக்கிரன், செவ்வாய், குரு, சனி என்று இருப்பார்கள். இருவருக்கும் கடைசியில் சனி தென்படுவதால், மகரத்துக்கும் கும்பத்துக்கும் சனி அதிபதியாக அமைந்துள்ளார்.

ஆன்மாவுடன் மனம் இணையவேண்டும். அத்துடன் எண்ணங்கள் இணைந் தால் மட்டுமே, அது வளர்ந்து அனுபவத்துக்கு வரும். ஆன்மா, மனத்துடன் இணைகிறது; மனம், புலனுடன் இணைகிறது; புலன்கள் பொருட்களுடன் இணைகின்றன என்கிறது ஜோதிடம் (ஆன்மாமனஸா ஸம்யுஜ்யதே...).

இருக்கிற பொருள், தோற்றமளிக்கும்; வளரும்; மாறுபாட்டைச் சந்திக்கும்; வாட்டமுறும்; மறையும். ஆக... இருத்தல், தோன்றுதல், வளருதல், மாறுபடுதல், வாட்ட முறுதல், மறைதல் ஆகிய ஆறுவித மாறுபாடுகளைக் கொண்ட பொருளுக்கு, எல்லாமே உண்டு. அது மனிதனுக்கும் உண்டு. அதனை ஆறு பாவ விகாரங்கள் என்கிறது சாஸ்திரம் (அஸ்தி, ஜாயதெ, வர்த்ததெ, விபரிணமதே, ம்லாயதெ, நச்யதி, இதி). சூரிய- சந்திரனுடன் இணைந்த இந்த ஐந்து கிரகங்கள், ஜீவராசிகளில் தென்படும் ஆறுவித மாற்றங்களை நடைமுறைப்படுத்துகின்றன எனும் கோணத்தில், ராசிச் சக்கரத்தின் கிரக வரிசைகள் சுட்டிக்காட்டுகின்றன.

மனிதனாகப் பிறந்தவன் முதலில் சந்திப்பது கல்வியை. அடுத்து பொருளாதாரம், செயல்பாடு, தெளிவு பெற்று மகிழ்தல், கடைசியில் மறைதல் என அவனது வாழ்க்கை நிறைவுறுகிறது. இந்த வரிசையில் புதன், சுக்கிரன், செவ்வாய், குரு, சனி எனத் தென்படுகிறது. இறுதியில் உள்ள சனி, மறைவைச் சந்திக்கிற வேளையை நடைமுறைப்படுத்துகிறார். அதாவது, சனி பகவான் அழிவைத் தருபவர் அல்ல; அழிவு வரும் வேளையைச் சுட்டிக்காட்டுபவர்.

'பிறந்தவனுக்கு இறப்பு உண்டு; இறப்பு இருப்பவனே பிறக்க இயலும்; அதுதான் நியதி’ என்கிறார் ஸ்ரீகிருஷ்ணர். விதை முளைக் கிறது; வளர்கிறது. இலை, பூ, காய், கனி என மாறுபாடுகளைச் சந்திக்கிறது; வாட்டமுறுகிறது; மறைகிறது என்பது நமக்குத் தெரியும். உடலில், ஆன்மாவுக்குக் குடியிருக்கத் தகுதியில்லாத நிலையில், உடலுக்கு மறைவு வருகிறது. அந்த வேளையை வரையறுக்கும் பணியை சனி பகவான் சுட்டிக்காட்டுகிறார். நம்மை வளர்த்து, நமக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்து, இன்ப - துன்பங்களை கர்மவினைப்படி செயல்படுத்தி, வாழவைப்பவர் சனி பகவான். உடல் வாழத் தகுதியற்ற நிலையில், மறுபிறவி தருவார்; பாபமும் புண்ணியமும் அற்றுப் போயிருப்பின், மறைவை இறுதியாக்கி மோட்சம் தருவார்.

'சம் சனைச்சராய நம:’ என்று சொல்லி, சனி பகவானுக்கு 16 வகை உபசாரங்களை அளித்து வழிபடலாம். 'நம: ஸ¨ர்யாய ஸோமாய மங்களாய புதாய ச குருசுக்கிர சனிப்ய: சராஹவே கேதவே நம:’ எனும் ஸ்லோகத்தைச் சொல்லி, 12 நமஸ்காரங்களைச் செய்தால், 12 ராசியில் வீற்றிருக்கும் கிரகங்களை வணங்கி வழிபட்டதாக ஆகிவிடும். உடல் - உள்ளத்தை வாடவைத்து, அடிபணிந்தால்தான் பலன் உண்டு என நினைக்க வேண்டாம். உள்ளத் தெளிவுடனும் ஈடுபாட்டுடனும்

சனி பகவானின் திருநாமத்தைச் சொல்லி வழிபட்டால், அவனருளால் இன்பம் பொங்கும்; மூன்று நிலைகள் இருந்தாலும், நம்மைப் பொறுத்தவரை 'பொங்கும்’ சனியாகவே நமக்குக் காட்சி தருவார்.

சனீஸ்வரரை தினமும் வணங்கி, மனதில் உறைந்தவராக மாற்றினால், விசேஷ பூஜை, தனி வழிபாடுகள் ஏதும் தேவையே இல்லை. வாழ்வின் ஒவ்வொரு பருவத்துக்கும் ஏற்பச் செயல்பட்டு, வளங்கள் அனைத்தையும் நமக்குத் தந்தருளும் சனீஸ்வர பகவானை மனதாரப் பிரார்த்திப்போமாக!