ஞாயிறு, 16 அக்டோபர், 2011
ஆரோக்கியம் அருளும் ஆலய விருட்சங்கள்!
தர்ம சிந்தை, பக்தி, சகல கலைகளையும் அறியும் ஆர்வம், அமைதி, பிறருக்கு மனதாலும் தீங்கு நினைக்காத இயல்பு ஆகியன உத்திராட நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணங்கள்!
சனிக்கிழமை, டிசம்பர் 21-ம் தேதி முதல் ஜனவரி 19-ம் தேதி வரை பிறந்தவர்களுக்கு உரிய நட்சத்திரம், உத்திராடம். மேற்கண்ட காலங்களில், அதிக அளவில் வெளிப்படும் உத்திராடத்தின் கதிர் வீச்சுக்களை, வாகை மரம் தனக்குள் சேகரித்து வைத்துக் கொள்ளும். உத்திராட நட்சத்திரம், வாகை மரத்துடன் தொடர்பு கொண்டது. இந்த நட்சத்திரத்தின் கெட்ட கதிர்வீச்சுக்களை சுத்தம் செய்து ஆக்ஸிஜனாக மாற்றிக் கொடுக்கிறது வாகை. இந்த மரத்தைத் தினமும் தொட்டாலும், இதன் நிழலில் இளைப்பாறினாலும் கெட்ட கதிர் வீச்சுக்கள் நீங்கிவிடும்.
வாகை (வைகை) மரம், திருவாழ்கொளிபுத்தூர் ஸ்ரீவண்டமர் பூங்குழல் நாயகி (ஸ்ரீப்ரமா குந்தலாம்பாள்) சமேத மாணிக்கவண்ணர் (ஸ்ரீரத்னபுரீஸ்வரர்) சுவாமி ஆலயத்தின் தல விருட்சம். நாகை மாவட்டம், மயிலாடுதுறை தாலுகா, திருப்புன்னத்தூரிலிருந்து சுமார் 8 கி.மீ. தூரத்தில் உள்ள இந்தத் தலம், திருவாழப்புத்தூர் எனப்படுகிறது.
அருகில் உள்ள இலுப்பைப்பட்டு தலத்துக்கு பாண்டவர்கள் வந்தனர். அவர்களில் அர்ஜுனன் மட்டும் மேற்கில் இருந்த வாகை மரக் காட்டில், ஒரு மரத்தடியில் போய் அமர்ந்தான். அவனுக்குக் கடும் தாகம். அப்போது முனிவர் ஒருவர் அங்கு வர, ''சுவாமி, தாகமாக இருக்கிறது. இங்கே தண்ணீர் எங்கு கிடைக்கும்?'' என்று கேட்டான். முனிவர், தன் கையிலிருந்த தண்டத்தினால் நீர் நிலை (தண்ட தீர்த்தம்) உண்டாக்கி, தண்ணீர் வழங்கியருளினார். உடனே அர்ஜுனன், தன்னுடைய உடைவாளை முனிவரிடம் கொடுத்து விட்டு, தண்ணீரை இரு கைகளாலும் அள்ளிக் குடித்தான். பின்னர் திரும்பிப் பார்த்தால், முனிவரைக் காணோம். முனிவரின் காலடிச் சுவட்டைத் தொடர்ந்து, தேடி அலைந்தான். முனிவராக வந்தது இறைவனே. அவர், ஒரு வாகை மரத்தடியில் புற்றில் இருந்த வாசுகி பாம்பிடம் உடைவாளை கொடுத்துவிட்டு, ஆலயத்தை அடைந்தார். பிறகு, இது இறை விளையாட்டு என உணர்ந்த அர்ஜுனனும் இறைவனை தொழுதான். அவனிடம் உடைவாளைத் தருமாறு வாசுகிப் பாம்பை பணித்தார் இறைவன். இதனால், இந்தத் தலம், 'திருவாள் அளி புற்றூர்’ என வழங்கலாயிற்று. பிறகு, திருவாழ் கொளிபுத்தூர் என்றாகி, தற்போது திருவாழப்புத்தூர் எனப்படுகிறது.
கடும் பஞ்சத்தில் உலகம் தவித்தபோது, தானியங்கள், ரத்தினங்கள், மழை ஆகியவற்றைத் தந்தருளியதால் இங்கேயுள்ள இறைவனுக்கு ஸ்ரீரத்தினபுரீஸ்வரர் எனும் திருநாமம் அமைந்தது. இங்கேயுள்ள ஸ்ரீதுர்கை மிகவும் சாந்தமானவள். மகிஷாசுரமர்த்தினியாக அவதரித்தவள், வதம் முடிந்ததும், சாந்தம் கொண்ட தலம் இதுவாம்! ஸ்ரீபிட்சாடனர், ஸ்ரீநடராஜர், ஸ்ரீசிவகாமி, ஸ்ரீசனி பகவான் (இங்கு நவக்கிரகங்கள் இல்லை), வாசுகி பாம்பு ஆகியோர் அருளும் தலம் இது. இங்குள்ள வாகை மரத்தைச் சுற்றி வந்து வணங்கினால், குழந்தை பாக்கியம் உண்டாகும் என்கின்றனர். துர்கா பரமேஸ்வரி அசுரனை அழித்து வெற்றி பெற்ற அடையாளமாக தல விருட்சமான 'வாகை’ போற்றி வணங்கப்படுகிறது.
வாகையின் இலைகளை அரைத்துக் கண்களில் வைத்துக் கட்டினால், கண் நோய்கள் குணமாகும். இதன் இலைகளைக் கஷாயமாக்கிச் சாப்பிட் டால், மாலைக்கண் நோய் சரியாகும். இதன் பூக்களை அரைத்து, பாம்புக்கடி விஷ முறிவுக்குப் பயன்படுத்துவர். தவிர, கட்டிகள், வீக்கங் களைக் குணமாக்கவும் வல்லது இது. வாகை மரப்பட்டை ரத்தமூலம், சீதபேதி ஆகியவற்றுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. இந்த மரத்திலிருந்து கசியும் பிசின், பெண்களின் வெள்ளைப்படுதல் முதலான நோய்களைக் குணப்படுத்துகிறது. உஷ்ண உடல் உள்ளவர்கள், வாகை மரத்தால் தயாரிக்கப்படும் மருந்துகளில் பசும் நெய் கலந்து சாப்பிட, உடற்சூடு தணியும். குறிஞ்சிப் பாட்டில், 'வடவனம் வாகை வான்பூங்குடசம்’ என வாகையைக் குறிப்பிட்டுள்ளனர். வெற்றி பெற்றவர்களை 'வாகை சூடியவர்கள்’ எனப் போற்றுகிறார் நச்சினார்க்கினியர்.
அடுத்தது, திருவோண நட்சத்திரத்துக்கான ஆலயம்...
பில்லி சூனியம் அகலும்!
''சாந்த சொரூபினியாக ஸ்ரீதுர்கை அருளாட்சி செய்யும் தலம் இது. ராகு காலத்தில் இவளை வணங்கினால், நவக்கிரக தோஷம் அகலும்; பில்லி சூனியம் விலகும்; கொடிய ரோகங்கள் நிவர்த்தியாகும்; பிள்ளை வரம் கிடைக்கும். இந்தத் தலத்து இறைவன் சந்நிதிக்கு முன்னே திருமணம் முடிப்பது விசேஷம். அவர்களுக்கு அனைத்துச் செல்வங்களையும் அருளுவார் ஈசன் என்பது ஐதீகம்'' என்கிறார் ஆலய அர்ச்சகர் நாகராஜ குருக்கள்.
--------------------------------------------------------------------------------
கல்வியாளர்கள், இசை விரும்பிகள், அறிஞர்கள், நறுமணப் பிரியர்கள், ஆடை- அணிகலன்கள் மீது விருப்பமுள்ளோர், தூய்மையாக இருக்க விழைவோர்... திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்களாகவே இருப்பார்கள். திருவோணம் நட்சத்திரம், மகர ராசி மற்றும் சனிக்கிரகம் ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டது. சனிக்கிழமை மற்றும் டிசம்பர் 21-ம் தேதி முதல் ஜனவரி 19-ம் தேதி வரை பிறந்தவர்களை திருவோண நட்சத்திரம் ஆட்சி செய்கிறது. இந்தத் தினங்களில் மேற்படி நட்சத்திரத்தின் கதிர்வீச்சுக்கள் பூமியில் அதிக அளவு இருக்குமாம். சரக்கொன்றை மரம் அவற்றைத் தனக்குள் சேமித்துக்கொண்டு, கெட்ட கதிர்வீச்சுக்களை நன்மை தரும் நல்ல கதிர் வீச்சுக்களாக மாற்றி விடுகிறது.
பந்தநல்லூர் ஸ்ரீவேணுபுஜாம்பிகை சமேத ஸ்ரீபசுபதீஸ் வரர் கோயிலின் ஸ்தல விருட்சம்- சரக்கொன்றை.
கும்பகோணத்தில் இருந்து சுமார் 27 கி.மீ. தொலைவில் உள்ளது இந்தத் தலம். கண்வ முனிவரும் தேவர்களும் வேண்டியபடி, இந்தக் கோயிலில் ஸ்ரீபரிமளவல்லித் தாயாருடன் ஸ்ரீஆதிகேசவப் பெருமாளும் தனிச் சந்நிதியில் அருள்கிறார். சுயம்பு மூர்த்தியாக புற்று வடிவில் ஸ்ரீபசுபதீஸ்வரர் எனும் திருநாமத்துடன் குடிகொண்டிருக்கிறார் சிவனார். புற்றின் மீது பசுவின் காலடி பட்ட சுவடும், அம்பிகை ஆடிய பந்தின் சுவடும் இன்றைக்கும் உள்ளன. அம்பாள்- ஸ்ரீவேணுபுஜாம்பிகை. அதாவது, மூங்கில் போன்ற தோள் அழகு கொண்டவள் என்று அர்த்தம்.
அம்பிகைக்கு, பந்து ஆடுதலில் விருப்பம் வந்து, சிவனாரை வேண்டினாள். அவளுக்கு நான்கு வேதங்களையும் பந்தாகத் தந்தருளினாராம் சிவபெரு மான். திருக்கயிலையில், தோழியருடன் பந்தாடினாள் பராசக்தி. அப்போது தன்னையே மறந்தாள். சூரியனும் அஸ்த மனம் ஆகாமல், நெடு நேரத்துக்கு ஒளி கொடுத்தான். விளையாட்டு வளர்ந் தது; பகலும் நீண்டது. இதில் உலகம் சோர்வுற்றது. விளையாட்டில் ஆழ்ந்த உமையவள் மீது கடும் கோபம் கொண்டார் சிவனார். அவள் ஆடிய பந்தினை எட்டி உதைக்க... அது பூமியில் வந்து விழுந்தது. பிறகு, தவற்றை உணர்ந்து மன்னிப்புக் கேட்டாள் அம்பிகை. அடுத்து ஈசனின் ஆணைப்படி பசுவாக மாறி, சரக் கொன்றை மர நிழலில், சுயம்புவாகத் தோன்றிய சிவலிங்கத் திருமேனிக்கு பாலைச் சொரிந்து வழிபட்டாள்; அந்தத் தலம் 'திருப்பந்தணைநல்லூர்’ என்றாகி, பிறகு 'பந்தநல்லூர்’ ஆனதாகச் சொல்கிறது ஸ்தல புராணம்.
இங்கு, திருமணக் கோலத்தில் இறைவனும் இறைவியும் காட்சி தருவது கொள்ளை அழகு! இங்கே, இறைவனின் திருமணத்தைக் கண்டு வழிபட்ட ஆனந் தக் களிப்புடன் நேர் வரிசையில் நிற்கிறார்கள் நவக்கிரகங்கள். இவர்களை வழிபட, கோள்களால் ஏற்படும் துயரம் அழியும் என்பது ஐதீகம்! வருடத்தில், ஆவணி மாதம் 19, 20, 21 தேதிகளில் இறைவன் திருமேனியில் சூரியக் கதிர் படும் அற்புதம் நிகழ்கிறது!
வாய்ப்புண், தொண்டைப் புற்று ஆகியவற்றைத் தடுக்கும் சக்தி, சரக் கொன்றை மரத்துக்கு உள்ளது. இதன் இலைக் கொழுந்தை அரைத்துச் சாறாக்கி, சர்க்கரை கலந்து சாப்பிட்டால், வயிற்றில் உள்ள கிருமிகள், பூச்சிகள் வெளியேறிவிடும். இலையைத் துவையல் செய்தும், கடைந்தும் சாப்பிடலாம். அரைத்துப் படர்தாமரைக்குப் பூசலாம். கீல்வாதம் மற்றும் முகத்தில் வலிப்பு உள்ள இடங்களில் இலை யைத் தேய்க்கலாம். மூளைக் காய்ச்சலுக்கும் உகந்தது இது! சரக்கொன்றைப் பூவுக்கு புழுக்களைக் கொல்லும் திறன் உண்டு. பூவை தனியாகவோ அல்லது இலைக் கொழுந்துடனோ அரைத்து, பாலில் கலந்து உட்கொண்டால் வெள்ளை, வெட்டை, காமாலை நோய்கள் நீங்கும். பழச்சாற்றுடன் பூவை அரைத்துத் தேய்த்துக் குளித்தால், தேமல், சொறி ஆகியவை குணமாகும். பூவை பாலுடன் காய்ச்சி உட்கொண்டால், உடல் உறுப்புகள் வலுப்பெறும். சரக்கொன்றையால் தயாரிக்கப்படும் மருந்து, தடைப்பட்ட மாத விலக்கை வெளியேற்றும்.
கடலூர் மாவட்டம் திருவதிகை ஸ்ரீவீரட்டேஸ்வரர் கோயில், மதுரை மாவட்டம் திருப்பனூர் கொன்றை வேந்தனார் ஆலயம் உள்ளிட்ட பல ஆலயங்களின் தலவிருட்சம்- சரக்கொன்றையே!
வியாபாரம் சிறக்கும்!
''இது, பித்ரு சாப நிவர்த்தி ஸ்தலம். கண் பார்வைக் குறைபாடுகளை நீக்கியருளும் தலமும்கூட! சொத்து வழக்கில் நியாயம், கடன் பிரச்னை, தொழில் விருத்தி ஆகியவற்றைத் தந்தருள்கிறார் ஸ்ரீபசுபதீஸ்வரர். வித்தை, கல்வி, குழந்தைப்பேறு ஆகியவற்றை ஸ்ரீவேணுபுஜாம்பிகை வழங்குகிறாள்'' என்கிறார் ஸ்ரீபசுபதீஸ்வரர் கோயிலின் ராஜசேகர குருக்கள் ''ஸ்ரீமுனீஸ்வரருக்கு ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் உண்டு. செய்வினை, ஏவல், பில்லி சூனியம் அகற்றும் சக்தி வாய்ந்தவர் முனீஸ்வரர்'' என்று சொல்லிச் சிலிர்க்கிறார் குருக்கள்.